தசரா விழா நிறைவு-நெல்லையில் இன்று 33 சப்பரங்கள் அணிவகுப்பு : நாளை சூரசம்ஹாரம்
நெல்லை: நெல்லையில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா விழா நிறைவையொட்டி இன்று இரவு 33 சப்பரங்கள் புறப்பாடு நடக்கிறது.
பாளையில் உள்ள ஆயிரத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு வழிபாட்டுடன் தசரா விழா கடந்த 8-ம் தேதி துவங்கியது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை அம்பாளுக்கு சிறப்பு வழிபாடும், இரவு சப்பர பவனியும் நடக்கிறது. இதுபோல் தூத்துவாரி அம்மன், யாதவர் உச்சிமகா காளியம்மன் மற்றும் வடக்கு முத்தாரம்மன், முப்புடாதியம்மன், புதிய மற்றும் பழைய உலகம்மன், பேராத்து செல்வியம்மன் உள்பட 13 அம்மன் கோவில்களில் தசரா விழாவையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விழாவில் தினமும் அம்மன் கொலு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது.
விஜயதசமியான இன்று இரவு அம்மன் சப்பரங்கள் ஊர்வலமாக புறப்பட்டு பாளை கோபாலசாமி கோவில் திடலை அடையும். அங்கு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர். பி்ன்னர் நாளை மாலை 13 சப்பரங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக பாளை மார்கெட் திடலில் அணிவகுத்து நிற்கும்.
அன்று இரவு பாளை போலீஸ் கட்டுபாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில் சூரசம்ஹாரம் நடக்கிறது. டவுன் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் இருந்து 20 சப்பரங்கள் இன்று இரவு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரடி திடலில் சக்தி தரிசனம், சப்பர அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்கின்றனர்.
பாளை மற்றும் நெல்லை பகுதிகளில் ஒரே நாளில் 33 சப்பரங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக அணிவகுத்து நிறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications