குலசேகரபட்டினத்தில் தசரா விழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
உடன்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில் நேற்றிரவு சூரசஹம்காரம் நடந்தது. நேற்று காலை முதலே கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்ற வண்ணம் இருந்தனர்.
மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நவராத்திரி விழாவே இங்கு தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், அன்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
10-ம் நாள் திருவிழாவான நேற்று காலை அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்கு மகிசா சூரமர்த்தினி திருக்கோலத்தில் அன்னை மகிசாசூரனை வதம் செய்தாள். இதையடுத்து அன்னையின் வெற்றியினை கொண்டாடும் விதத்தில் வானவேடிக்கை நடந்தது. பின்னர் அன்னை பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.