தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது!
டெல்லி: பிரபல தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைத் தொகுதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்து உள்ளது.
இலக்கிய வளர்ச்சிக்காக மத்திய அரசு அமைத்துள்ள அமைப்பு சாகித்ய அகாதமி. ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் வெளியான புத்தகங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது இந்த அமைப்பு.
இந்த ஆண்டு 22 இந்திய மொழிகளில் வெளியான எழுத்தாளர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருது பெற்ற எழுத்தாளர்களின் பெயர் பட்டியலை அகாதமியின் தலைவர் சுனில் கங்கோபாத்யாய் நேற்று வெளியிட்டார்.
தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
இந்த 22 எழுத்தாளர்களில் தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் விருதுக்குரிய எழுத்தாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
இவர் எழுதிய 'சூடிய பூ சூடற்க' என்ற புத்தகத்துக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்தப் புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புக் ஆப் ராச்சல் என்ற நாவலுக்காக எஸ்தர் டேவிட் என்ற பெண் எழுத்தாளர் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார். கன்னடத்தில் ரகமத் டரிகேரே எழுதிய விமர்சனப் புத்தகத்துக்காக அவருக்கு விருது கிடைத்து உள்ளது.
மலையாளத்தில் எம்.பி. விரேந்திர குமார் எழுதிய பயண நூலான 'ஹைமாவதப்பூவில்' என்ற புத்தகத்துக்காக அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 74 வயதான இவர் மலையாளத்தில் 10-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய ராமன்டே துக்கம் என்ற புத்தகம் 18 பதிப்புகள் வெளியாகி உள்ளது. இவரது புத்தகம் கேரள மாநில சாகித்ய அகாதமி விருதும் பெற்றது. 1997-ம் ஆண்டு மத்திய ராஜாங்க தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்தார் விரேந்திர குமார். மலையாள நாளிதழான மாத்ருபூமியின் ஆசிரியர்தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு மொழிக்கான விருதுக்குரிய எழுத்தாளர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
தாமிர பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கம்!
விருது வழங்குவிழா டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி நடைபெறும். விருதாக தாமிர பதக்கமும், சால்வையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் (செக்) அப்போது எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications