கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு பாரபட்சமற்ற கடும் தண்டனை: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
சென்னை: கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ஐ திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்ச்சித்தது. இது குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு சுற்றறிக்கைகள் அனுப்பியது.
ஆனால், இதற்கு சில பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் போனது. இன்று கள்ளத்தொடர்பு பற்றிய செய்திகள் இல்லாத செய்தித்தாள்களே இல்லை. கள்ளக்காதலன் அல்லது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.
இந்த கள்ளத்தொடர்பால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. உலக அரங்கில் மதிக்கப்படும் இந்திய கலாசாரத்திற்கே இழிவு உண்டாக்கி விடும் போல் இருக்கிறது.
எனவே முதல்வர் கருணாநிதி, வரும் 26-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ல் திருத்தம் கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். இதன் மூலம் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.