காந்தி மியூசியத்தை புதுப்பிக்க மத்திய அரசு ரூ. 2.50 கோடி நிதி: காந்தி ஜெயந்தி அன்று பணிகள் தொடக்கம்

காந்தி மியூசியம் அமைந்துள்ள தற்போதுள்ள கட்டிடம் ராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 1959-ம் ஆண்டு முதல் இங்கு காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அன்னல் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய கண் கண்ணாடி, காலணி, அவர் சுடப்பட்டபோது அணிந்திருந்த ஆடைகள் (ரத்தம் படிந்த நிலையில்) போன்றவை பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதன்முதலாக மகாத்மா காந்தியின் நினைவாக மதுரையில் தான் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதற்கு பின்னரே புது டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன.
முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் தினமும் வருகின்றனர். எனவே, அருங்காட்சியகத்தை புதுப்பிக்க அதன் நிர்வாகக் குழுவினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசின் பரிந்துரையின்பேரில், மத்திய அரசின் கலை, பண்பாட்டுத் துறையிடம் ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்குமாறு அருங்காட்சியகத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தலைமையிலான குழு கோரிக்கை விடுத்தது.
இது தவிர அருங்காட்சியகத்தை புதுப்பிக்க பொதுமக்களிடம் ரூ. 62 லட்சம் வசூலிக்கவும், மதுரை என்.எம்.ஆர். சுப்புராமன் அறக்கட்டளை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது ரூ. 30 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த பணிக்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 2.50 கோடி நிதி அளித்துள்ளது.
இந்த நிதியை வைத்து அருங்காட்சியகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கை மழையிலும், வெயிலிலும் பார்வையாளர்கள் அமரும் வகையில் மாற்றி அமைக்கவும், அருங்காட்சியக வளாகத்தில் புல்வெளிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள விருந்தினர் மாளிகையைப் புதுப்பிக்கவும், புத்தகக் கடை, நூலகத்தை நவீனமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது காந்தி அருங்காட்சியகம் வெள்ளை நிறத்தில் உள்ளது. இதை பழைய வண்ணமான பொன்நிறத்திற்கே மாற்றக் கோரிக்கைகள் வந்துள்ளதை அருங்காட்சியக நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து அருங்காட்சியகத் துணைத்தலைவர் வழக்கறிஞர் மு. மாரியப்பன் கூறுகையில்,
காந்தி ஜெயந்தி அன்று புதுப்பிக்கும் பணிகள் தொடங்கவுள்ளது. அருங்காட்சியக வளாகத்தை நவீனப்படுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications