தஃபாரெஜ்-ஜித்தா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்பு
ஜித்தா: சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் ஆண்டுதோறும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' என்னும் 'நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 22ம் தேதி தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' நிகழ்ச்சி ஹோட்டல் இம்பாலாவில் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம், சமோசா, கட்லெட், பழங்கள், பழச்சாறு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக ஜித்தா தமிழ் மன்றம், ஜெட்டா தமிழ்ச் சங்கம், கிரிட், மெப்கோ மற்றும் ஐஎப்டி ஆகிய அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
மாஸ்டர் மர்வான் கிராஅத்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு சாலிஹ் மரைக்கார் வரவேற்புரை அளித்தார். இதையடுத்து பிரபல பேச்சாளர் “ஷேக் வஜ்டி அக்காரி" ரமலான் மாதத்தின் சிறப்புப் பற்றி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து இஸ்லாம் பற்றிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது.
கிரிட் அமைப்பின் தலைவர் ஓ.பி.ஆர். குட்டி, ஐஎப்டி ஜனாப். சித்திக் மதனி, ஜெட்டா தமிழ்ச் சங்கம் ஜம்போ மோகன், ஜித்தா தமிழ் மன்றம் அன்புமணி, ஹோப் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் துணைத் தலைவர் (கல்வி) ஷபிகுர் ரஹ்மான் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் அவசியத்தையும் பற்றி பேசியதோடு, தஃபாரெஜ்-ஜித்தாவின் சமூக சேவையையும் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக ஜாபர் சாதிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஷாஜஹான் நன்றியுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications