பாளையங்கோட்டை சிறையில் 44 பேர் பல்கலைக் கழக தேர்வு எழுதினர்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் 44 பேர் பல்கலைக் கழகத் தேர்வு எழுதினர்.
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறையை விட இந்த சிறையில்தான் கல்வியில் ஆர்வம் உள்ள கைதிகள் அதிகம் உள்ளனர். இதனால் பாளையங்கோட்டை சிறை கல்வியில் முதலிடம் வகித்து வருகிறது.
இங்கு படித்து பட்டம் பெற்ற சிலர் வெளியில் நல்ல நிலையில் உள்ளனர். தமிழக சிறைதுறை வரலாற்றில் முதன்முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சிறைவாசிகளுக்கு இங்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
வளர் கல்வி திட்டம்,செயல்முறை விரிவாக்கப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் எழுத படிக்க கற்றுக் கொண்ட கைதிகள் தற்போது வீட்டிற்கு கடிதம் எழுதி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் மூலம் கார் பழுது பார்த்தல், ரெப்ரிஜிரேடர் பழுது பார்த்தால் பட்டய பயிற்சியை 13 கைதிகள் முடித்துள்ளனர்.
பிரகலநாதன் என்ற ஆயுள்கைதி, நெல்லை பல்கலைக் கழகம் மூலம் எம்.பி.ஏ. படித்து வருகிறார். 2 கைதிகள் எம்.பில் படிப்புக்கு ஆய்வு கட்டுரை தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சிறையி்ல் உள்ள 44 கைதிகள் இளங்கலை பட்டப்படிப்புக்கான தேர்வுகளை எழுதினர். இத்தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் வரை நடந்தது.
தேர்வுக்கான தலைமை கண்காணிப்பாளராக சிறை கண்காணிப்பாளர் அறிவுடை நம்பியும், பார்வையாளராக புனித ஜான்ஸ் கல்லூரி பேராசிரியர் ஜெய்சுந்தர்சிங், தேர்வுக் கூட கண்காணிப்பாளராக இருதய அரசு, செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.