சவுதியில் வேலை பார்த்த இலங்கை பெண் உடலில் 23 ஆணிகள்: சவுதி அரேபியாவிடம் இலங்கை புகார்
கொழும்பு: சவூதி அரேபியாவில் வேலை பார்த்த இலங்கைப் பெண்ணின் உடலிலிருந்து 23 ஆணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர் வேலை பார்த்து வந்த வீட்டின் உரிமையாளர் செய்த கொடுமை இது.
அரபு நாடுகளில் வீட்டு வேலை பார்ப்பதற்காக இலங்கையில் இருந்து ஏராளமான பெண்கள் செல்கின்றனர். இதே போன்று மாதரா என்ற இடத்தைச் சேர்ந்த ஆர்யாவதி (49) என்ற பெண் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்குச் சென்றார்.
ரியாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். அந்த வீட்டின் எஜமானி ஆர்யாவதியை சித்ரவதை செய்து வந்துள்ளார்.
ஓயாது வேலை வாங்கியது மட்டுமின்றி உடல் முழுவதும் சூடு போட்டுள்ளார். இந்தக் கொடுமைகளைச் செய்தது போதாது என்று அவர் உடல் முழுவதும் ஆணிகள் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்ட ஆர்யாவதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சொந்த நாட்டிற்கு திரும்பினார். அவர் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அவர் உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தன. மேலும், கை, கால் மற்றும் பல்வேறு இடங்களில் அடிக்கப்பட்ட ஆணி புதைந்த நிலையில் இருந்தன. அவர் உடலில் இருந்த மொத்த ஆணிகளின் எண்ணி்க்கை 23 ஆகும்.
அவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பல மாதங்களாக தொடர்ந்து சித்ரவதை அனுபவித்ததால் ஒருவித பதற்றதுடன் காணப்படுகிறார்.
ஆர்யாவதி சவுதி அரேபியாவில் இருந்து கொழும்பு வந்தபோது சவுதி அரேபியா விமான நிலையத்தில் வழக்கமான சோதனை நடந்துள்ளது. அப்போது அவர் உடலில் இருந்த ஆணியால் மெடல் டிடெக்டர் ஒலி எழுப்பியுள்ளது. ஆனாலும் அவற்றை கண்டும் காணாமல் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சவுதி அரேபியாவிடம் இலங்கை அரசு புகார் செய்துள்ளது.
இது பற்றி இலங்கை வெளி விவகாரத் துறை அதிகாரி ரன்டனியா கூறியதாவது,
இந்த சம்பவம் இலங்கையை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது பற்றி இங்குள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் புகார் செய்திருக்கிறோம். மேலும், முறையான ஆவணங்களுடன் புகார் கொடுக்க இருக்கிறோம். இதற்காக ஆவணங்களை அரபு மொழியில் மொழி பெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.