சேலம் ஷில்பா மிஸ் கூவாகமாக தேர்வு

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை விழுப்புரம் ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் அரவாணிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
முதலில் நடனப் போட்டி நடைபெற்றது. அதில், 20-க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்துகொண்டு விதவிதமான கவர்ச்சி உடைகளில் நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
கூந்தல் அழகுப் போட்டியில் கலந்துகொண்ட 15 அரவாணிகள் தங்களது கூந்தல்களை அலங்கரித்துக் கொண்டு பார்வையாளர்கள் மத்தியில் கூந்தல்களை விரித்து காட்டியபடி அசத்தினர்.
இதனை தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட மிஸ் கூவாகம் 2010-க்கான அழகிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் விழுப்புரம், டெல்லி, மும்பை, பெங்களூர், கரூர், கேரளா, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 47 அரவாணிகள் கலந்துகொண்டு விதவிதமான வண்ண உடைகளில் மேடையில் தோன்றி பார்வையாளர்களை அசத்தினர்.
47 அரவாணிகளில் நடை, உடை, பாவணை அடிப்படையில் முதல் சுற்றில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பேச்சுத்திறமை அடிப்படையில் 2-வது சுற்றுக்கு 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு பொது அறிவுத்திறன் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதில் அளித்த சேலத்தை சேர்ந்த ஷில்பா மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தூத்துக்குடி ரங்கீலா 2-ம் இடத்தையும், ஈரோடு சிம்ரன் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
நடனப்போட்டியில் முதலிடம் பிடித்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, 2-ம் இடம் பிடித்த ராஜி, 3-ம் இடம் பிடித்த சேலம் உஷா ஆகியோருக்கும், கூந்தல் அழகு போட்டியில் முதலிடம் பிடித்த பெங்களூர் திவ்யா, 2-ம் இடம் பிடித்த சினேகா, 3-ம் இடம் பிடித்த சேலம் ஷில்பா ஆகியோருக்கும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் அலெக்ஸ் பரிமளம், விழுப்புரம் மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் சரவணபாஸ்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் ஷில்பாவிற்கு ஈரோடு கோட்டை அரிமா சங்க மகளிர் உறுப்பினர் பெருக்கம் விஜயராணி ராஜேந்திரன் பட்டம் அளித்து கிரீடம் அணிவித்து ரூ.2 ஆயிரத்து 500-ஐ பரிசாக வழங்கினார்.
இதேபோல் 2-ம் இடம் பிடித்த தூத்துக்குடி ரங்கீலாவிற்கு மாநில உலகத் தமிழ் கவிஞர் பேரவை சிறப்பு செயலாளர் வசந்தி ஸ்டான்லி கிரீடம் அணிவித்து ரூ.1,500-ஐ பரிசாக வழங்கினார். 3-ம் இடம் பிடித்த ஈரோடு சிம்ரனுக்கு விழுப்புரம் மாவட்ட உலகத்தமிழ் கவிஞர் பேரவை செயலாளர் விஜயநந்தினி கிரீடம் அணிவித்து ரூ.ஆயிரத்தை பரிசாக வழங்கினார்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications