குளச்சல் வெற்றித் தூணுக்கு 31-ம் தேதி நினைவு தினம்: ராணுவ வீரர்கள் வீரவணக்கம்
குளச்சல்: குளச்சலில் 269 ஆண்டுகளுக்கு முன் டச்சு படையை தோர்கடித்த திருவிதாங்கூர் படை வீரர்களின் நினைவாக நிறுவப்பட்ட வெற்றித் தூணுக்கு வரும் 31-ம் தேதி இரண்டாவது முறையாக ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.
கிபி 18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் குளச்சல் கடற்கரையில் கப்பல் வழியாக டச்சு படை வந்தது. அப்படையை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படை தோற்கடித்து வெற்றி வாகை சூடியதின் நினைவாக போர் நடந்த குளச்சல் துறைமுகக் கடற்கரையில் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி மன்னர் மார்த்தாண்ட வர்மா விக்டரி பில்லர் எனும் வெற்றித் தூணை நிறுவினர்.
சுமார் 20 அடி உயரத்தில் திருவிதாங்கூர் அரசு முத்திரையான சங்கு சின்னத்தை மகுடமாக தாங்கி நிற்கும் ஒரே கல்லினால் ஆன இந்த வெற்றித் தூணுக்கு வரும் 31-ம் தேதியுடன் 269 வயது நிறைவடைகிறது.
வெற்றித் தூணின் நினைவு தினத்தை முன்னி்ட்டு வரலாற்றில் முதன் முறையாக கடந்த ஆண்டு ஜூலை 25-ம் தேதி கேரள மாநிலம் பாங்கோடு ராணுவ முகாமை சேர்ந்த 16-ம் மெட்ராஸ் கமாண்டோ படையின் ராணுவ வீரர்கள் வெற்றித் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
அதே போன்று இந்த ஆண்டும் வரும் 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு கேரள மாநிலம் திருவிதாங்கூர் மாங்கோடு ராணுவ முகாமை சேர்ந்த ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். இதற்கு முன்னேற்பாடாக கடந்த 24-ம் தேதி 15 ராணுவ வீரர்கள் வெற்றித் தூண் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தனர்.
வீரவணக்கத்தில் திருவிதாங்கூர் உத்தரடாம் திருநாள் மார்த்தாண்ட மகாராஜா வர்மா, ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் தேவாரம், ராணுவ அதிகாரிகள், குமரி மாவட்டத்தின் அரசு உயர் அதிகாரிகள், குளச்சல் நகராட்சி சேர்மன் ஜேகையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications