வங்கதேசத்தில் உள்ள ஜோதிபாசுவின் பூர்வீக இல்லம் நூலகமாகிறது

வங்கதேசத்தில் உள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரோடி கிராமத்தில் ஜோதிபாசுவின் பூர்வீக இல்லம் உள்ளது. இங்குதான் ஜோதிபாசுவின் தந்தை பிறந்தார். இந்த பகுதி அப்போது கிழக்கு வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வங்கதேசம் உருவான போது இந்தப் பகுதி அந்த நாட்டுடன் சேர்ந்து விட்டது. இது டாக்காவுக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஆகும்.
தனது தந்தை நிஷிகாந்த் பாசு பிறந்த இந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார் ஜோதி பாசு. ஆனால் அதற்கான வாய்ப்பே அமையாமல் போய், இறுதி வரை அவரது ஆசை நிராசையாகிப் போனது.
இந்த நிலையில் இந்த வீட்டை தற்போது நூலகமாக மாற்ற வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இது ஜோதிபாசுவின் கடைசி ஆசைகளில் ஒன்றாகும்.
இதுகுறித்த உறுதிமொழியை வங்கதேச நாடாளுமன்றத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அளித்தார்.
ஜோதிபாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் மீது வங்கதேச நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் ஹசீனா உள்ளிட்டோர் பேசினர்.
உணர்ச்சிவசப்பட்ட குரலில் ஹசீனா பேசுகையில், ஜோதிபாசு ஒரு முதுபெரும் அரசியலவாதி மட்டுமல்ல, துணைக் கண்ட அரசியலின் மாபெரும் காப்பாளரும் கூட. அவரது மரணத்தால் இந்தியா மாபெரும் தலைவர் ஒருவரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை இழந்துள்ளது.
வங்கதேசம் தனது மிகச் சிறந்த நலம் விரும்பியை இழந்துள்ளது. எனக்கு இது தனிப்பட்ட முறையில் பேரிழப்பாகும். நல்லதொரு பாதுகாவலரை நான் இழந்துள்ளேன் என்றார் ஹசீனா.
இல்லத்தின் கதை...
நாராயண் கஞ்ச் மாவட்டம், பரோடி கிராமத்தில் உள்ள 2 மாடிகளைக் கொண்ட அந்த பாழைடந்த வீடு ஜோதிபாசு குடும்பத்தின் பெருமைகளைப் பறை சாற்றிக் கொண்டு அமைதியாக நிற்கிறது.
ஜோதிபாசுவின் மறைவுச் செய்தியால் இந்தக் கிராமத்தில் சோகம் காணப்படுகிறது. ஜோதிபாசு குடும்பத்தினரின் அருமை, பெருமைகளை ஊர் மக்கள் மிகப் பெருமையாக கூறுகின்றனர்.
ஜோதிபாசுவின் இளமைக் காலத்தின் ஒரு பகுதி இந்த வீட்டில்தான் கழிந்தது.
2.04 ஏக்கர் பரப்பளவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. 2 மாடிகளைக் கொண்ட மிக அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட புராதன கட்டடம் இது.
இந்த வீடு தற்போது 75 வயதாகும் ஷாஹிதுல்லா என்பவரின் பராமரிப்பில் உள்ளது. இங்கு தனது குடும்பத்தினருடன் ஷாஹிதுல்லா வசித்து வருகிறார். இவருடைய தாயார் அயத்துன்னிசாதான், ஜோதிபாசு குழந்தையாக இருந்தபோது பார்த்துக் கொண்டாராம்.
ஜோதிபாசுவின் தந்தை நிஷிகாந்த் பாசு ஒரு டாக்டர் ஆவார். இவரை இப்பகுதியினர் என்கே பாசு என்று அழைப்பார்கள். அவருடைய மனைவி பெயர் ஹேமலதா. இவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர்தான்.
இந்த வீட்டில் 1942 வரை பாசு குடும்பத்தினர் வசித்தனர். பின்னர் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.
கொல்கத்தாவுக்குப் போன பின்னரும் கூட என்.கே.பாசு இந்தக் கிராமத்திற்கு அடிக்கடி வருவார், ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பாராம். தந்தை வரும்போது கூடவே ஜோதிபாசுவும் வருவாராம்.
பாசுவின் தாயார் ஹேமலதா மறைந்த பின்னர் ஜோதிபாசுவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அயத்துன்னிசாவிடம் வந்தது. வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பு ஷாஹித்துல்லாவுக்கு வந்தது.
தற்போது ஜோதிபாசுவின் உறவினர்கள் யாரும் இங்கு இல்லை.
மேற்கு வங்க மாநில முதல்வராக ஜோதிபாசு இருந்தபோது, 1987ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி ஒரு முறையும், பின்னர் 1997ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி என இரண்டாவது முறையும் வங்கதேசத்திற்கு வந்தார் ஜோதிபாசு. அந்த பயணத்தின்போது தனது பூர்வீக கிராமத்திற்குச் சென்று மக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications