உயரம் குறைந்த பெற்றோருக்குப் பிறந்த ஆரோக்கிய குழந்தை-தாய், தந்தை மகிழ்ச்சி
சென்னை: உயரம் குறைவான தம்பதிக்கு அழகான,ஆரோக்கியமான, இயல்பான குழந்தை பிறந்துள்ளது. இதனால் அந்தத் தம்பதியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அருகே சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் 3 அடி 8 அங்குலம் உயரம் உடையவர். வயது 31. இவருடைய கணவர் கந்தசாமி. இவரும் உயரம் குறைவானவரே.
உயரம் குறைந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் திலகவதி கர்ப்பமடைந்தார். கூடவே கவலையும் பிறந்தது. உயரம் குறைந்த நமக்கு எப்படி குழந்தை பிறக்குமோ என்ற கவலை அது.
நிறைமாக கர்ப்பிணியான திலவதியை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் சேர்த்தார் கந்தசாமி. அங்கு அவருக்கு அழகான ஆரோக்கியமான, இயல்பான குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.7 கிலோவாக உள்ளது.
அதை விட ஆச்சரியமாக சுகப் பிரவசமாக குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் திலகவதி. குழந்தை நன்றாக இருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் திலகவதி-கந்தசாமி தம்பதியினர்.
இதுகுறித்து பிரவசம் பார்த்த டாக்டர் விஜயா கூறுகையில், திலகவதி மிகவும் உயரக் குறைவாக இருந்ததால் குழந்தை எப்படி இருக்குமோ என்று நினைத்தோம். ஆனால் மற்ற குழந்தைகளைப் போலவே திலகவதியின் குழந்தையும் இருந்தது. மற்ற குழந்தைகளைப் போல் இதுவும் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்றார்.