சுடர் வம்சம் 5ம் ஆண்டு விழா-ஸ்ரீவித்யாவுக்கு இளமைச் சுடர் விருது
துபாய்: துபாயில் சுடர்வம்சம் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா 11ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவித்யாவுக்கு இளமைச் சுடர் விருது வழங்கப்பட்டது.11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை துபாய் கனடியன் பல்கலைக்கழக அரங்கில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தை அமீரக கலைஞர்கள் ஸ்வேதா மற்றும் ஷில்பா ஆகியோர் நிகழ்த்தினர். கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுத்துறை நெறியாளர் முனைவர் எஸ். ஸ்ரீதரன் பங்கேற்றார். கீபோர்டு கலைஞர் ஸ்ரீவித்யாவுக்கு இளம் சுடர் விருது வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் சுடர்வம்சம் செய்து வரும் கல்வி மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டினார். தமிழின் தொன்மை குறித்து விவரித்த அவர் அமீரகத் தமிழர்கள் அனைவரும் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொண்டார்.
சுடர் வம்சம் தலைவர் தனது உரையில் நமது இந்தியத் திருநாடு ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போல உயர முடியும், அதற்காக இளைய சமுதாயத்தினர் முன்வரவேண்டும். இதற்கு வளர்ந்த தலைமுறையினர் வழி வகை செய்ய வேண்டும். நல்லவை செய்தால் நாம் நாட்டை சொர்க்கமாக மாற்றலாம். நன்மை செய்யும்போது புண்ணியம் கிடைக்கும்.
மேலும் ஜூலை மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு ரகுராஜ் 050-2164375 மற்றும் சென்னையில் கமலக்கண்ணன் 9840161818 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்
மதர்ஸ் பிரீஸ் நிவேதிதா குழுவினரின் நடனம் ஸ்ரீவித்யாவின் கீ போர்டு கலக்கல், சுரேஷின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
துபாய் தமிழ்ச் சங்க நிறுவன புரவலர் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஜியாவுதீன், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பொதுநல சேவகர் அஷ்ரஃப் அலி, அமீரக தமிழ் மன்ற தலைவர் ஆசிஃப் மீரான், சங்கமம் தொலைக்காட்சி கலையன்பன், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி முதுவை ஹிதாயத், யுஏஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஹனிபா, சுப்பையா உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செல்வி நிவேதிதா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.