துபாயில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் குறுந்தகடு வெளியீடு
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கல்வி குறித்த உரை அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அத்துடன் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநரும், மெட்ஸ் ஆசிரியப் பயிற்சி நிறுவன தலைவருமான எம்.எஸ்.நெய்னா முஹம்மது அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் சேர்த்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தலைமை தாங்கினார். இளங்கோவன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய எம். எஸ். நெய்னா முஹம்மது கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு நலப் பணிகளை ஆற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
பொருளாளர் ஜஹாங்கீர் அக்பர் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வில் ஹெச்.அமீர் சுல்தான், ஜாஹிர் உசேன், துணைப் பொதுச்செயலாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ், ஹெச். இப்னு சிக்கந்தர், என். ஜே. சீனி முஹம்மது, கனி, ஹபீப் திவான், எஸ்.என். ஃபக்ருதீன், முஹம்மது அலி, ஜாஹிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ சங்க விழாவில் துரைமுருகன்:
இந் நிலையில் துபாய் தமிழ்ச் சங்க விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் துபாய் வந்துள்ளார்.
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்திய கான்சுலேட் அரங்கில் நடக்கிறது.
இவ்விழாவில் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
இதற்காக இன்று அதிகாலை துபாய் வந்துசேர்ந்த அமைச்சர் துரைமுருகனுக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை மற்றும் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு விழாவில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. ஹமீது யாசின், துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், பொருளாளர் கீதா கிருஷ்ணன், துணைப்பொருளாளர் சுந்தர், இளங்கோவன், நஜுமுதீன், இக்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications