வள்ளல்களாய் வாழ்ந்து இன்று வறுமையோடு போராடும் தியாகிகள்
அக்கொடிய கால கட்டத்தில் நம் தேசத்தில் பல ஆயிரக்கணக்கனோர் ஆங்கங்கே தியாக வேள்வியோடு, சுதந்திர தாகத்தோடு சொந்தங்களையும், சொத்துகளையும் மட்டுமல்ல தங்களது உயிரையும் கூட துச்சமாக மதித்து தேசத்தின் எழுச்சிக்காக போக்குவரத்து வசதிகளற்ற காலகட்டத்தில் போராட்ட களத்தில் அடிபட்டவர்கள், லத்திகளின் தாக்குதல்களில் தழும்புகளை உடல் முழுவதும் வாங்கியவர்கள், மரணத்தை தழுவியவர்கள் என பல ஆயிரம் இளைஞர்கள் நம் தேசத்தில் மறக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வரலாறுகள், தியாகம் மறைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றவர்களின் வரலாறுகள் பராமரிக்கப்பட்டும், பல தகவல்கள் பராமரிக்கப்படாமலும் இருக்கின்றன.
தீவிரமான போராட்ட கால கட்டத்தில்தான் அகிம்சை வழி போராட்டம் மட்டுமே வெற்றியை கொடுக்காது, ஆயுதம் ஏந்திய புரட்சி போராட்டமும் அத்திவாசிய தேவை என்று அப்போதைய இளைஞர்கள் கூட்டம் கருதியது.
புரட்சி போராட்டத்தை நேரு, மகாத்மா, உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக கொள்ளவில்லை. ஆனால் தலைவர்களின் அகிம்சை வழியை ஏற்றுக் கொள்ளாத விடுதலை வேட்கை கொண்ட இளைஞர் பட்டாளம் அன்று நாட்டில் அதிகரித்திருந்தது. அந்த வெறி கொண்ட இளைஞர் கூட்டத்தினை வழிநடத்திட நேதாஜி பக்கம் பார்வையை திருப்பி ஒரு மாபெரும் கூட்டமாய் இளைஞர்கள் அவர் பின் சென்றனர்.
தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்கள் காலம் கனியும் என காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த காலம் கனிந்து வந்தது. அப்படி உதயமானது தான் வீரவாஞ்சி நாதன், சாவடி அருணாசலப்பிள்ளை, அழகப்ப பிள்ளை உள்பட ஒரு இளைஞர் கூட்டம்.
அக்கூட்டம் அடிக்கடி தென்மலை உள்பட பல்வேறு பகுதிகளில் ரகசியமாய் சந்தித்து ஆயுதப் பயிற்சியை மேற்கொண்டது. அக்கூட்டத்தினர் பாரத மாதா என்ற சஙகத்தையும் தொடங்கினர். அடிக்கடி இளைஞர்கள் அப்போதைய நிலக்கிழார்களான செல்வந்தர்கள் சாவடி அருணாசபிள்ளை, அழகப்ப பிள்ளை, வீரவாஞ்சிநாதன் உள்ளிட்ட அனைவரும் அருணாசலப் பிள்ளை வீட்டு மாடியில் அமர்ந்து விவாதம் நடத்துவதுண்டு. அதில் ஆங்கிலேயரின் அடக்கு முறைதான் மிக முக்கியமாக இருந்தது.
அப்படி விவாதம் நடந்த காலகட்டத்தில் ஜார்ஜ் என்ற அதிகாரி இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்தார். இவர் வரவுக்கு பின் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அடவடித்தனம் அதிகரித்தது. அப்போதுதான் தமிழகத்தில் உள்ள 5 ஆங்கிலேய கலெக்டர்களை கொலை செய்ய முடிவெடுத்தனர்.
யார், யாரை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்ய சீட்டு குலுக்கி போட்டனர். அதில் முதலில் நெல்லை கலெக்டர் ஆஷ்துரை பெயர் வந்தது. முதல் கட்ட திட்டம் தயாராகி 1911-ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி நெல்லையில் இருந்து கொடைக்கானல் போகும் கலெக்டர் ஆஷ்துரையை ரயிலில் சுட்டு கொல்ல வீரவாஞ்சிநாதனும், சாவடி அருணாச்சலப் பிள்ளையும் சென்றனர்.
திடடமிட்டபடி ஆஷ்துரையை வீரவாஞ்சிநாதனும், சாவடி அருணாசலமும் சுட்டு கொல்ல இடுப்பில் துப்பாக்கியுடன் தயாராக, மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த ஆஷ்துரையை வீரவாஞ்சி நாதன்சுட்டு கொலை செய்தார். அதே ரயிலில் அவரும் கள சாவு அடைந்தார். அருணாசல பிள்ளை அங்கிருந்து கொல்கத்தா தப்பி சென்றார். அங்கு போலீஸ் இவரை தேடி சென்றது. (அங்குள்ள மருத்துவ கல்லூரியில், ஆஷ் கொலை நடந்த அன்று வகுப்பில் அருணாச்சலம் இருந்தார் என்று அங்குள்ள ஆவணங்களில் பதிவாகியிருந்தது.) நூலகத்தில் இருந்த அவரை கைது செய்தது.
அதே போல் இங்கு அழகப்ப பிள்ளை உள்பட பல பேரை போலீஸ் கைது செய்து சித்ரவதை செய்தது. வழக்கு செலவுக்காக குடுமப சொத்துகள் அனைத்தையும் இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டு இநதியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் பலர் அரசு உதவி பெறாமலேயே இறந்தனர் ஆங்கிலேயர்களின் சித்ரவதை மட்டுமின்றி பல போராட்டங்களிலும் சாவடி அருணாசலப்பிள்ளையின மகன் சொக்கலிங்கம, அழகப்பபிள்ளை மகள் கோதையம்மாள், ஆகியோர் சிறு வயதிலேயே நெல்லை கொக்கிரகுளம் சிறையிலும், பின் தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் கண்காணிப்பு, வீட்டு சிறை என பல்வேறு காலங்களில் ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கு ஆளாகி, இன்று தள்ளாத வயதில் வறுமையோடு போராடி வருகின்றனர்.
வறுமையோடு போராடிய இவர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் பென்சன் கேட்டு போராடி வந்தனர். சொக்கலிங்கம் பிள்ளைக்கு 1994ல் மாநில அரசு முழு பென்சன் வழங்க உத்தரவிட்டது. மத்திய அரசுக்கு 1975ல் இருந்து 25 ஆண்டு காலமாக மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
86 வயதில் எல்லாம் இழந்து நம்பிக்கை மட்டும் இழக்காமல் மத்திய அரசு பென்சன் கிடைக்கும் என்று நம்பி்க்கையோடு காத்திருக்கிறார். மேலும் தனக்கு 25 ஆண்டுகாலமாக பென்சன் வரவில்லை என்றும் கூறுகிறார்.
தியாகி கோதையம்மாள் (89) கூறும்போது தனக்கு கடந்த ஆண்டுதான் மாநில அரசு ரூ.2,500 பென்சன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பென்சனு்ம் சரி, மாநில அரசு பென்சனும் சரி தனக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றார். மேலும் இவர்கள் கூறும்போது மாநில அரசுக்கு பென்சன் கேட்டு விண்ணப்பிக்கும்போதே அதன நகலை மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பப்படுவது பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் இல்லை என்கிறார்.
மத்திய அரசின் தியாகி ஓயவூதியம் பெறுவோர் எண்ணிக்கை பட்டியல் வருமாறு,
பீகார் - 24,800
மேற்கு வங்கம் - 22,484
உ.பி - 17,990
மகாராஷ்டிரா - 17,732
ஆந்திரா - 14,573
கர்நாடகா - 10,084
குஜராத் - 3,596
டில்லி - 2,044
நேதாஜி குரூப் (இந்தியன் நேஷனல் ஆர்மி) - 22,469
மொத்தம் 1,35,841
ஆக, இந்தியாவில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 841 பேர் உதவி தொகை தற்போது பெற்று வருகின்றனர். ஆனால் இன்னும் 1 லட்சத்து 71 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளனவாம். 20 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 2010 மார்ச்சுக்குள் அனைத்து விண்ணப்பங்களும் உண்மைதானா என மத்திய அரசு ஆய்வு செய்து முடித்து விடும் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் பட்டியல் இடம் பெறவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. உண்மையான தியாகிகளுக்கு இந்த தினத்தில் அரசு அவர்கள் வறுமை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
உண்ண ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்று....













Click it and Unblock the Notifications