களக்காடு செங்கல் தேரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு செங்கல் தேரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இது களக்காடு புலிகள் காப்பகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். அடர்ந்த காட்டுக்குள் தலையணை, செங்கல்தேரி ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
செங்கல்தேரியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட மாளிகை உள்ளது. மலைக்கு சுற்றுலா செல்பவர்கள் வனத்துறை பாதுகாப்போடு அந்த மாளிகையில் தங்கி மலையின் அழகை ரசிப்பார்கள். அங்கு வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதி உள்ளது. களக்காட்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் பயணம் செய்தால் செங்கல்தேரியை அடையலாம்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூட செங்கல்தேரிக்கு சுற்றுலா சென்றார்கள். இதற்காக குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டு வந்தது. தற்போது செங்கல்தேரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நேற்று முதல் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து வந்த 30 பேர் செங்கல்தேரிக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினரிடம் நேற்று அனுமதி கேட்டனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட நேரம் போராடி பார்த்தும் அனுமதி கிடைக்காததால் கடைசியில் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.