சித்திரை 1ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டாக தொடர்கிறது- காலண்டர்களில்!
தை மாதம் 1ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடபட வேண்டும் என கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதற்காக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. தமிழப் புத்தாண்டை மாற்றியதை, பொங்கலுடன் சேர்த்து இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை அரசு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கவும் செய்தது.
ஆனால் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள கிட்டத்தட்ட அனைத்து காலண்டர்களிலும் இன்னும் சித்திரை 1ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு காலண்டர்கள் முன் கூட்டியே அச்சடிக்கப்பட்டு விட்டதால் தமிழ் வருட பிறப்பை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக காலண்டர் அச்சடிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தன.
ஆனால் இந்த ஆண்டு தினசரி, மாதந்திர காலண்டர்களிலும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என குறிப்பிடாமல் உள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெரும்பாலான காலண்டர்களிலும் சித்திரை 1ம் தேதி (ஏப் 14) தமிழ் வருட பிறப்பு என அச்சடித்துள்ளனர். அரசு மற்றும் அரசு சார்பு பொது துறை நிறுவனங்கள், வங்கிகள் அச்சடித்துள்ள காலண்டரில் மட்டும் தை 1ம் தேதி தமிழ் வருட பிறப்பு என அச்சடித்துள்ளனர்.
மீதமுள்ள 90 சதவீத காலண்டரில் சித்திரை 1 தமிழ் வருட பிறப்பு என்றும், அரசு விடுமுறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
திமுகவினர் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அன்பளிப்பாக வழங்கும் காலண்டர்களிலும் இதேபோலத்தான் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு என குறிப்பிட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications