தமிழக-கேரள எல்லை மதுபான கடையில் நிரம்பி வழியும் மாணவர் கூட்டம்
குடி குடியை கெடுக்கும், குடிபழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், மது நாட்டுக்கும், வீ்ட்டுக்கும் கெடு என்ற வாசங்களோடு அரசு கஜானாவை இன்று நிரம்பி வழிய செய்வது டாஸ்மாக் மதுபான கடைகளின் படுஜோர் வியாபாரம் தான்.
தமிழகத்திலுள்ள பல ஆயிரம் கடைகள் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் இதன் மூலம் கிடைக்கிறது. கடைகளைத் தேடி மக்கள் போக வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குப் பக்கத்திலேயே தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.
தனியார் வசம் மதுகடைகள் இருந்த கால கட்டத்தில் குடிமகன்கள் குறைவாகவே இருந்தனர். அரசு என்று மதுபான கடைகளை தன் வசப்படுத்தியதோ அன்று முதல் குடிமகன்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி, கல்லூரி மாணவர்கள் மட்டததில் இருந்த மது அருந்தும் பழக்கம் இன்று 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை பெருகிவி்ட்டது.
சமீபத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் குடிபோதையில் தகராறு செய்ததும், வகுப்பறையில் குடிபோதையில் இருந்ததும், மதுபாட்டில்களோடு பிடிபட்ட வரலாறுகளும் உண்டு.
தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் குற்றாலம், கேரளா மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாஉருட்டி அருவி, தென்மலை எக்கோ டூரிஸ்ட் சென்டர் உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இப்படி சுற்றுலா வரும் பலரும் முதலில் நாடி போவது மதுபான கடையைதான். பெரியவர்கள்தான் இப்படி என்றால், பள்ளி, கல்லூரி மாணவர்களும் மதுபான கடைகளில் முற்றுகையிட்டு கும்மாளம் அடிப்பது தமிழக-கேரள பகுதியான செங்கோட்டையில் நித்தம் காண முடிகிறது.
படிக்கும் இளைஞர்கள் இப்போதே மதுவுக்கு அடிமையாகும் அவல சம்பவம் அதிகரிக்க தொடங்கியுள்ளதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் புலம்புகின்றனர். கல்வி கட்டணத்தை கட்டுபடுத்தும் அரசு கனிவுடன் மாணவர்களின் எதிர்காலம் சிதைந்து போவதைத் தடுப்பதும் மிக மிக அவசியம்.













Click it and Unblock the Notifications