ரியாதில் தமிழர்களின் 8 ஆவது ரத்த தான முகாம்
தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உலகம் முழுவதும் ஆன்மீகப் பணியுடன், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல், நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுதல், மாணவக் கண்மணிகளுக்கு உதவுதல், இன, மத, மொழி வேறுபாடின்றி அவசர சிகிச்சைகளுக்காக இரத்ததானம் செய்தல், முன்னேற்பாட்டிற்காக உயிர்காக்கும் இரத்ததான முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு மனிதநேயப்பணிகளை செய்து வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும் தமிழர்களின் மதிப்பு இதன் மூலம் உயர்ந்து வருகின்றது.சவூதி அரேபியாவில் அதன் தலைநகரான ரியாத் மாநகரில் பல்வேறு மனித நேயப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், தனது 8 வது இரத்ததான முகாமை 23-04-2010 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடத்தியது.
காலை 10 மணிக்கு துவங்கிய இந்த முகாமில் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு குருதிக் கொடையாளிகள் பங்கு பெற்றனர். தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழ் பேசும் மக்களுடன் இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள், பிற நாட்டவர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த முகாமில் 217 பேர் குருதிக் கொடையளித்தனர்.
ஹஜ் பயணிகளுக்காகவும், சுதந்திர தினத்தின் போதும், அவசர தேவைக்காகவும் என அடிக்கடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இரத்ததான முகாம்களை நடத்துவதால் சவூதி அரேபியாவின் எப்பகுதியில் யாருக்கு இரத்தம் தேவைப்பட்டாலும் அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இரத்தம் வழங்கி உயிர் காத்து வருகின்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் சேவையை பாராட்டி, இரு கேடயங்களை மருத்துவமனை நிர்வாகம் பரிசளித்தது. சவூதி அரேபியாவிலேயே அதிகமானோர் இரத்ததானம் வழங்கியவர்கள் என்ற இடத்தை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பணிபுரிய வந்த இடத்தில் தமிழர்களின் மனித நேயப்பணியை - தமிழர்களால் நடத்தப்படும் இந்த முகாம்களால் - கடல் கடந்த மனித நேயத்தை அரேபியர்களும் பாராட்டி வருகின்றனர்.
தகவல்- ஃபெய்ஸல், ரியாத்