திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஜூலை 16ம் தேதி ஆழித் தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா உலக புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்க ஆழித்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவின் நிறைவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர கொடியேற்று விழா நிறைவாக ஆழித்தேர் செல்வதற்காக தியாகராஜசாமி தேவாசிரியர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஆனால் தேரோடும் 4 வீதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் சிமெண்டு சாலை பணி மற்றும் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறுவது தாமதமானது. இதனால் தேவாசிரியர் மண்டபத்தில் தியாகராஜசாமிக்கு தினமும் பூஜை நடைபெற்று வந்தது. இதற்கிடையே ஆடிப்பூர விழா வருகிற ஜுலை 20-ந் தேதிக்கு மேல் நடைபெறுவதால் அதற்குள் ஆழித்தேரோட்டம் நடைபெற வேண்டும் என்பது ஐதீகம். எனவே, இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் எப்போது நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில்,தியாகராஜசாமி கோவிலில் அறநிலையத்துறை இணை ஆணையர் எம்.கவிதா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் ஜுலை 16-ந் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் சிமெண்டு சாலைப் பணிகளை நிறைவேற்றி தருவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது ரூ.5.85 லட்சம் மதிப்பில் ஆழித்தேர் சிறுபராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆழித்தேர் முழுமையாக சீரமைக்கப்படும். இதற்காக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ரூ.14.60 லட்சம் மதிப்பில் நவக்கிரக சன்னதி மேல் பகுதியில் இரும்பு கம்பியால் கூரை அமைக்கப்பட உள்ளது.
ரூ.9 லட்சம் மதிப்பில் கமலாலயக்குளத்தில் படகுத்துறை அமைக்கப்படுகிறது. ஆரூரான் திருமண மண்டபத்தை சீரமைக்க ரூ.45 லட்சம் வழங்க அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications