மாசி மகம்- கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராடினர்
கும்பகோணம்: மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள மகா மகக் குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தின் போது மாசிமகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழா, கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் வெகு விமரிசையாக மாசி மக விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
அதன்படி சிவன் கோவில்களான ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், பாணபுரீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் மாசிமகத் திருவிழாவுக்காக, கடந்த 19ம் தேதி கொடியேற்றப்பட்டு பத்து நாள் பிரமோற்சவ விழா தொடங்கியது.
தொடர்ந்து காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி வீதிவுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமகம் நேற்று நடந்தது.
மகாமகக்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரையில் உள்ள படிகளில் காத்திருந்தனர். அப்போது, ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் உட்பட சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் ஆகியோர், வெவ்வேறு வாகனங்களில் வந்தனர்.
அதன் பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் அஸ்திர தேவருக்கு மகாமகக்குளக்கரையில் மஞ்சள், பால், சந்தனம் உட்பட பல்வேறு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாமகக்குளத்தில் அஸ்திரதேவர் இறங்கியதும் பக்தர்கள் அனைவரும் குளத்தில் இறங்கி புனித நீராடினர். குளத்தில் பூக்கள், நெல் தூவினர்.
இதேபோல, ராமசுவாமி, சக்கரத்தாழ்வார் உட்பட ஐந்து வைணவ கோவில்களைச் சேர்ந்த சுவாமிகள் காவிரிப் படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுத்தனர். அங்கும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
இந்த விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
திருத்தணியில் மாசி மக விழா:
இதேபோல, திருத்தணி முருகன் கோவிலிலும் மாசிப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் தினசரி சிறப்பு பூஜைகள், சாமி வீதி உலா நடைபெற்று வந்தன. தொடர்ந்து 26-ந் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணம், மறுநாள் கதம்பப்பொடி விழா உள்ளிட்டவை கோலாகலமாக நடந்து முடிந்தன.
நேற்று இறுதிநாள் என்பதால் காலையில் தீர்த்தவாரி சண்முகசாமி உற்சவம், முன்னாள் அறங்காவலர் மு.நாகன் உபயத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மு.நாகன் குடும்பத்தார், முன்னாள் கவுன்சிலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் திருக்குளம் அருகே உள்ள பீமாசெட்டி மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம் முடிந்து சாமி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
இரவு கொடிஸ்தம்பத்தில் இருந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடி இறக்கப்பட்டது. நேற்று மாசி மகம் என்பதாலும், பவுர்ணமி என்பதாலும் பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்து முருகனை தரிசித்தனர். இதையொட்டி தங்க கவசம் அணி விக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் மு.ஈஸ்வரப்பன், இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, அறங்காவலர்கள் க.பால கிருஷ்ணன், ஏ.வி.சக்கரப்பன், ஜி.உஷாரவி, பொன் குணசேரகன், பேஷ்கார்கள் பி.சுப்பிரமணி, கே.சுப்பிர மணியம் ஆகியோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications