திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 6-ம் தேதி துவங்கியது. இதையொட்டி கோயில் வளாகம் மற்றும் விடுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
4-ம் நாளான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. சுவாமி ஜெயந்திநாதர் சூரனை கடற்கரையில் வதம் செய்கிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வர்.
நாளை காலை கோயிலில் இருந்து தெய்வாணை அம்மாள் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் மண்டபத்தில் சேருகிறார். பின்னர் மாலையில் ஜெயந்தி நாதர் முக்கிய வீதிகள் வழியாக தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார்.
5-ம் சந்நதியில் சுவாமி அம்மனுக்கு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதை காண வரும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே இன்று சிறப்பு ரயிலை இயக்குகிறது. அதன்படி நெல்லையில் இருந்து இன்று மதியம் 12.15 மணி, 2 மணி, மாலை 4.55 மற்றும் இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில்கள் திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் செல்கின்றன.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இன்று காலை 9.20 மணி, பகல் 11.45, இரவு 9 மற்றும் 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் நெல்லைக்கு புறப்பட்டுச் செல்கின்றன.
பழனியிலும் இன்று சூரசம்ஹாரம்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலும் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பழனியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 6-ம் தேதி துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர். விழாவின் ஆறாம் நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இன்று மதியம் உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜை நடக்கிறது. இதைத் தொடர்ந்து சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் விழா நடைபெறுகிறது. இதையடுத்து மதியம் 3 மணிக்கு நடை சாத்தப்பட்டு, சின்னக்குமாரசாமி அடிவாரம் வந்தடைகிறார்.
பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் மயில்வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
மாலை 5.30 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.
இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயிலில் சம்ப்ரோட்சண பூஜையும், அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது. நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications