நெல்லையில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவுகிறது: மக்கள் அவதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள், மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், குடிநீரின் மாறுபட்ட தன்மையாலும் சளி, காய்ச்சல், இருமல், போன்றவை மக்களை அதிகம் பாதித்துள்ளன. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது ஒருவித வைரஸ் கிருமியால் பரவும் மெட்ராஸ்-ஐ தாக்குதல் நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய் வந்தால் கண்கள் ரத்த சிவப்பு நிறத்துக்கு மாறி விடும். கண்களில் தூசி விழுந்ததை போன்று உறுத்தல் இருக்கும். தொடர்ந்து கண்ணீரும், கசடும் வெளியேறும். கண்கள் வீங்கி காணப்படும். 3 முதல் 7 நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கும். காற்றின் மூலம் இந்நோய் எளிதில் பரவும் தன்மையுடையது.












Click it and Unblock the Notifications