விரைவில் பல்கலைக்கழகங்களில் தமிழ் செம்மொழி பாடம்
சென்னை: பல்கலைக்கழகங்களில் தமிழ் செம்மொழியைப் பாடமாக்குவது குறித்து ஆய்வு செய்ய வரும் 22ம் தேதி சென்னையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடக்கிறது.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் தமிழ்ச் செம்மொழியைப் பாடமாகக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள இணைப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ச் செம்மொழியைப் பாடமாகக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து ஆராய சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில் 22ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில் உயர்கல்வி முதன்மைச் செயலாளர் கணேசன், உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் ராமசாமி, உறுப்பினர் செயலாளர் பாஸ்கரன், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரிக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளி்ல் செம்மொழிப் பாடத்துக்கான பாடத் திட்டத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.