அரவாணிகளுக்கு தனி பாலினம் வழங்க நிபுணர் குழு பரிந்துரை
டெல்லி: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அரவாணிகளுக்கு தனி பாலினத்தை ஒதுக்கலாம் என அரசு நியமித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டுமல்லாமல் அனைத்துக் கணக்கெடுப்பிலும் ஆண் அல்லது பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கென தனி பாலினம் ஒதுக்க வேண்டும் என அரவாணிகள் கோரி வருகின்றனர்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் தங்களை தனி பாலினமாக குறிப்பிட வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
இதையடுத்து இதுகுறித்து பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரவாணிகளை தனி பாலினமாக குறிப்பிடலாம் என பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களை ஆண்கள் என்றும், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களை பெண்கள் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.