தமிழ் தேசியத்தை ஆதரிக்காதவர்களை எழுத்தாளர்களாகவே ஏற்க முடியாது - தி.க.சி.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவரையும் நேர்மையான எழுத்தாளர்களாகக் கருத முடியாது என்று கூறியுள்ளார் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான தி.க.சிவசங்கரன்.

குற்றாலத்தில் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பாரதி இலக்கிய விருது அளிக்கப்பட்டார் தி.க.சி.

விருதைப் பெற்ற பின்னர் அவர் பேசுகையில்,

தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவரையும் நேர்மையான எழுத்தாளர்களாகக் கருத முடியாது. தமிழ் மற்றும் தேசியம் பேசும் தினமணி மாதிரியான பெரிய பத்திரிகைகளுடன் இணைந்து சிறு பத்திரிகைகள் இயங்க வேண்டும்.

சிறு பத்திரிகைகள் இயக்கம் முன்னேற வேண்டும் என்றால் பெரிய பத்திரிகைகளின் ஆதரவு தேவை. பாரதியாரும், பாரதிதாசனும் காட்டிய வழியில் தினமணி மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் கலாசாரம் தீவிரமாக வளர்க்கப்படும் இன்றைய சூழலில் சிறு பத்திரிகைகளின் கொள்கை நெறியும், போக்கும் பாரதிதாசன் பாதையில் இருக்க வேண்டும். மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறவியல் என இம் மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளைச் செய்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

நமது ஊனோடும், உயிரோடும் கலந்தது தமிழ் தேசியம். இந்தக் குரலை அடக்கி ஒடுக்குவதற்கும், தவறான வழியில் திசைதிருப்புவதற்கும் பெரும்பான்மை அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், சில சக்திகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.

அவை மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் ஓர் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் தரமான எழுத்தாளர்களும், படைப்பாளிகளும்கூட பலிகடா ஆகப் போகின்றனர். எனவே, கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள், சிற்றுளிகளாகி அந்த மலைகளைத் தகர்க்க வேண்டும்.

அதேவேளையில், சிற்றிதழ்களுக்கு நல்ல படைப்புகளத் தந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும். அறிமுகப் படைப்பாளிகள், இளைஞர்கள், மாணவர்களுக்கு சிற்றிதழ்களே நாற்றங்காலாகவும், நடைவண்டியாகவும் இருக்கின்றன, இதில் பயிற்சி பெற்றவர்கள் பின்னாளில் தரமான படைப்பாளிகளாக உருவாகின்றனர். பாரதி முதல் புதுமைப்பித்தன் முதலான மாபெரும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் சிற்றிதழ்களால் வளர்ந்தவர்கள்தான் என்றார்

இலங்கை எழுத்தாளர் அந்தனி ஜீவா பேசுகையில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கையில் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்தவும், அதற்கு தமிழக எழுத்தாளர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முன்னதாக உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5-வது மாநில மாநாடு குற்றாலத்தில் உள்ள திருவிதாங்கூர் அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற பொதுக்குழு அமர்வுக்கு சங்கத் தலைவர் கவிஞர் வதிலை பிரபா தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலர் பாரதிவாசன், அமைப்புச் செயலர் திருவள்ளுவர் கா.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலர் கவிஞர் சொர்ணபாரதி ஆண்டறிக்கையையும், பொருளாளர் நந்தவனம் சந்திரசேகரன் பொருளறிக்கையையும் வாசித்தனர். இலங்கை கிளை அறிக்கையை அதன் செயலர் அந்தனி ஜீவா சமர்ப்பித்தார்.

மாநாட்டில்,

- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். இம் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வீடுகள்தோறும் சங்க இலக்கியம் என்ற பெயரில் மலிவுப் பதிப்பில் அனைவருக்கும் சங்க இலக்கியத் தொகுப்பை அரசு வழங்க வேண்டும்.

- மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் சிற்றிதழ்களுக்கு ரூ.30 ஆயிரத்தை 3 தவணைகளாக வழங்குகிறது. அதுபோல, தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். அஞ்சல் துறையில் அவ்வப்போது உருவாக்கப்படும் எழுதப்படாத கெடுபிடிகளை, விதிமுறைகளைக் களைய வேண்டும்.

- 2011 ஜனவரியில் கொழும்பில் நடைபெறும் உலகத் தமிழ் எழுத்தாளர் விழாவில் சிற்றிதழாளர்கள் கலந்துகொள்ள வேண்டும். இலங்கையில் அனைத்து தமிழ் மக்களும் சமஉரிமையும் அந்தஸ்தும் பெற்று, அமைதியுடன் வாழ மத்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சிற்றிதழாளர்களுக்கும் கலைமாமணி விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிற்றிதழ்கள் கண்காட்சியை மகாத்மா காந்தி சேவா மைய நிறுவனர் வி.விவேகானந்தன் துவக்கிவைத்தார்.

சிற்றிதழ் குறித்த கருத்தரங்கம் உதயம் ராம் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மணவாளன், அ.சுபாஷ், பாரதி, சந்திரா மனோகரன், வாழைகுமார், அ.மண்ணுலிங்கம், அ.செல்வதரன் உள்ளிட்டோர் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+