உவரி அருகே 140 மூடை அரிய வகை கடல் சங்குகள் பறிமுதல்
உவரி: உவரி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிய வகை கடல் சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அமீர் அம்தா மகன் பீர் முகமது. இவர் உவரி அருகேயுள்ள அரண்மனை புலிமான் குளத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அந்த வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை கடல் சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உவரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு செனறு வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு 140 மூடைகளில் அரிய வகை கடல் சங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் மாட்டுதலை என்னும் சங்குகள் 316, அதில் சிறிய வகை சங்குகள் 26, குதிரை முள்ளி சங்குகள் 4 ஆயிரத்து 600, யானை முள்ளி சங்குகள் 126-ம் அடக்கம். இவற்றை போலீசார் பறிமுதல் செய்து பீர் முகமுதுவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த சங்குகள் அனைத்தும் தூத்துக்குடியிலிரு்ந்து கொண்டு வரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு சென்னை, மும்பை, மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி வனத்துறை ரேஞ்சர் சாமுவேல் ராஜ்குமார் உவரி சென்று சங்குகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக நெல்லைக்கு எடுத்துச் சென்றார்.
எஸ்பி விஜேயந்திர பிதாரி, வள்ளியூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். சங்குகளை பதுக்கி வைத்திருந்த பீர் முகமதுவிடம் உவரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications