சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் தலித் ஆலய பிரவேச பவள விழா
சுசீந்திரம்: சுசீந்திரத்தில் தாணுமாலயன் சுவாமி கோவிலில் தலித்துகள் ஆலயத்திற்குள் பிரவேசிக்கக் காரணமாக இருந்த ஆலய பிரவேச சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் பாரதத்தை ஆட்சி செய்த காலத்திற்கு முன்பிருந்தே ஒருங்கிணைந்த பாரதத்தில் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பிரிவினை தலைவிரித்து ஆடியது. தலித்துகள் எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து காந்தியடிகள் உத்தரவுபடி அனைத்து பகுதிகளிலும் தலித்துகள் ஆலய பிரவேச போராட்டம் நடத்தினர்.
இதன் விளைவாகவும், போராட்டத்தின் வலிமை காரணமாகவும் அனைத்து பகுதிகளிலும் இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து திருவிதாங்கூர் மகாராஜா கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 16ம் தேதி அன்று ஆலயபிரவேச சட்டத்தை கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் அதுவரை மறுக்கப்பட்டு வந்த ஆலய பிரவேச உரிமை தளர்த்தப்பட்டு தலித்துகளும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபடும் உரிமை வழங்கப்பட்டது.