2 இந்தியர்களுக்கு ராமோன் மகசேசே விருது

ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் விருது ராமோன் மகசேசே. 2011-ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு 5 நபர்கள் மற்றும் ஒரு அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுபவர்களில் நீலிமா மிஸ்ரா மற்றும் ஹரிஷ் ஹண்டே ஆகிய 2 இந்தியர்களும் அடக்கம். ஹரிஷ் ஹண்டே பெங்களூரில் உள்ள செல்கோ இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர். அவர் இந்திய கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகளும் சூரிய சக்தியின் பயன்களைப் பெற அரும்பாடுபட்டு வருகிறார். தனது நிறுவன ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தான் இந்த விருது கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீலிமா மிஸ்ரா மகாராஷ்டிராவில் உள்ள கிராம மக்களின் மேம்பாட்டுக்காக அயராது உழைப்பவர். அவரது சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் இஸ்லாமியப் பள்ளியை நிறுவி பெண் கல்விக்காக உழைக்கும் ஹசனைன் ஜுவாய்னி, இந்தோனேசியாவில் மைக்ரோ நீர்மின்சக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்திய திரி மும்புனி, கம்போடியாவில் ஜனநாயகத்துக்கு போராடி வரும் கௌல் பனா, ஏஐடிஎப்ஐ என்ற அறக்கட்டளையும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இந்த விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications