அரசு போட்டி தேர்வுகளில் தியாகிகள் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு
நெல்லை: சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தி்ல் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கடந்த 1971-ம் ஆண்டு முதல் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் 5,186 பேர் தியாகிகளுக்கான பென்சன் வாங்கியுள்ளனர். தற்போது நேரடி சுதந்திர போராட்ட தியாகிகள் சுமார் 1300 பேர் தமிழகத்தில் வசிக்கின்றனர். இவர்களின் வாரிசுகள் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் இருக்கின்றனர்.
தியாகிகளி்ன் வாரிசுகள் ஒவ்வொறு ஆண்டும் குடியரசு தின மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் அமைப்பின் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்த அரசு இடஒதுக்கீடு வழங்குவதில் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளது.
மேலும் இந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தியாகிகளின் பேரன், பேத்திகள் விபரங்களை உடனடியாக சேகரித்து அந்த விபரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கடிதங்களை அரசின் பொதுத் துறை துணை செயலாளர் வசந்தி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications