அரியலூரில் நீதிமன்றங்களுக்கு பூட்டுபோட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்
அரியலூர்: அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றங்களுக்கு பூட்டு போட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
அரியலூரில் விரைவு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய 5 நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் 31வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படவில்லை என்பதால் உடனே மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி முதல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூரில் உள்ள 5 நீதிமன்றங்களின் கதவுகளை வழக்கறிஞர்கள் இழுத்துப் பூட்டி பூட்டு போட்டனர். மெயின்கேட்டையும் இழுத்து பூட்டினர். பின்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நீதிமன்றங்கள் பூட்டப்பட்ட சம்பவத்தால் அரியலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications