சபரிமலை: ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7 முதல் 15 வரை நிறுத்தம்: தேவசம்போர்டு முடிவு
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை வரும் ஜனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நிறுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
சபரி்மலை ஐயப்ப சாமி கோவிலில் கடந்த 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள்.
நாள்தோறும் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தினமும் இரவு ஹரிவராசனம் பாடி முடிந்து நடை சாத்திய பின்னரும் நடை பந்தலில் காத்திருந்து பக்தர்கள் மறுநாள் ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்புகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் முன் பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரக்கூட்டத்திலிருந்து நேராக நடைப்பந்தலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் இலகுவாக தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இதற்கிடையே ஜனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியை நிறுத்தி வைக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. மகர விளக்கு பூஜை தொடங்குவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.