இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே ஊட்டி மலை ரயில் ஓடும்: தென்னக ரயில்வே

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தென்னக ரயில்வே சார்பில் மலை ரயில் தினசரி இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த சில தினங்களாக சரியான நேரத்திற்கும் வருவதில்லை, பல முறை நடுவில் பழுதடைந்தும் விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தான் அவதிப்படுகிறார்கள். எனவே, ஊட்டி மலை ரயிலை தினசரி சீராக இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் ரயில் கோளாறுகள் குறி்தது ஆய்வு செய்ய நேற்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷண், தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் சூட், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் டி.என்.ராம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர்.
அந்த ரயில் கல்லார்-ஆடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கையில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே நின்றது.
இதையடுத்து அதிகாரிகள் கல்லார் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து வாகனம் மூலம் குன்னூர் சென்றனர்.
குன்னூரில் உள்ள லோகோ பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ஜின்களை பொது மேலாளர் தீபக் கிரிஷண் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
ரயில் என்ஜின்களை பராமரிக்கும் பொருட்டு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் இயக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிச்சயமாக மலை ரயில் இயக்கப்படும்.
பயணிகள் பாதுகாப்பாகவும், மனநிறைவுடனும் பயணம் செய்ய வேண்டும் என்பது தான் தெற்கு ரயில்வேயின் முக்கிய குறிக்கோளாகும். இதை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications