சித்ரா பவுர்ணமி மத பண்டிகை- அரசு அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு
சென்னை: சித்ரா பவுர்ணமியை மத திருவிழாவாக அறிவித்துள்ளதற்கு பக்தர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இதனை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் சித்ரா பவுர்ணமி நாளாக தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் பல வித உணவுகளை சமைத்து பலகாரங்களை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைகளிலோ, கடற்கரைகளுக்கோ சென்று உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கம்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் சித்ரா பவுர்ணமியை மத திருவிழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறித்தார். இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தனுஷ் கூறுகையில், திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்தபடியாக மிகவும் விமர்சையுடன் கொண்டாடப்படும் திருவிழா சித்ரா பவுர்ணமி. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு பக்தர்களிடம் மனநிறைவை ஏற்படுத்தி உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று நிலவு மிக சக்தியை பெற்று இருக்கும். அன்று கிரிவலம் வந்தால் பக்தர்கள் கூடுதல் பலன்கள் பெறுவர். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம்.
மாவட்ட இந்து முன்னணி தலைவர் சங்கர் கூறுகையில், சித்ரா பவுர்ணமி மத திருவிழாவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சித்திரை 1-ந் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று நிரூபணமாகி உள்ளது. இந்த அறிவிப்பால் சித்ரா பவுர்ணமி திருவிழாவுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும். இது பக்தர்களுக்கு மேலும் பல வசதிகளையும், நற்பலன்களையும் வழங்கும்.












Click it and Unblock the Notifications