மே 28 - குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவக்கம்
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில், வரும் 28 ம் தேதி பழக்கண்காட்சி துவங்க உள்ளதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஹால்தொரை செய்தியாளர்களிடம் கூறியதாவது
நீலகிரியில் நடைபெற்று வரும் கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியாக, குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சி வரும் 28 ,29 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முறை நடக்கும் 53 வது பழக்கண்காட்சியை முன்னிட்டு, 53 வகை பழ வகைகள் மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு வைக்கப்படும்.
நீலகிரி உள்பட மலை பிரதேசங்கள், மற்றும் கோவை, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் விளையும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.
நீலகிரி மலை ரயிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில், பூங்காவின் முன்பு சுமார் மூன்று டன் எடை கொண்ட 15 ஆயிரம் சாத்துக்குடி பழங்களை கொண்டு, 35 அடி நீளம், 13 அடி உயரம், 15 அடி அகலத்தில் பழமை வாய்ந்த குன்னூர் ரயில் நிலையத்தின் தோற்றம் அமைக்க உள்ளோம்.
பழங்களை தவிர, பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
தற்போது நடைபெற உள்ள பழக்கண்காட்சியில், சுமார் 60 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், வெற்றி பெறுபவர்களுக்காக, ஆறு சுழற்கோப்பை, 34 கோப்பை உட்பட 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர ஆங்காங்கே உள்நாட்டு, வெளிநாட்டு மலர் வகைகள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்ச் செடிகள் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications