துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, இஃப்தார் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதி அதன் மொழிபெயர்ப்பை விவரித்தார். முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதற்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் முன்னாள் மாணவர்களை நான் பாராட்டுகிறேன். இந்த முன்னாள் மாணவர் சங்கம் மேலும் வளர என்னால் முடந்த உதவிகளைச் செய்கிறேன் என்றார்.
ஈடிஏ பிபிடி எக்ஸிகியூடிவ் டைரக்டர் அன்வர் பாஷா அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் எந்த ஒரு செயலையும் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செய்தால் வாழ்வில் உயர்நிலையினை அடையலாம் என்றார்.
அதனைத் தொடர்ந்து ஜாபர் சித்திக் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி வரும் நன்கொடையாளர்கள் குறித்த விபரங்களைத் தெரிவித்தார். மேலும் வரும் செப்டம்பர் முதல் வாரம் திருச்சியில் நடைபெறும் முன்னாள் மாணவர் சங்க நிகழ்ச்சியில் அமீரகத்திலிருந்து ஈடிஏ பிபிடி எக்ஸிகியூடிவ் டைரக்டர் அன்வர் பாஷா, எம்பிஎம் அதிகாரி மலுக் முஹம்மது, சூப்பர் சோனிக் ஜியாவுதீன் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட உள்ளனர் என்று கூறினார். மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் ஐ.ஏ.எஸ். அகாடமி ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் ஜமால் முஹம்மது கல்லூரி சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். முன்னாள் மாணவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் அளப்பெரும் பணிகளை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் கூடி கல்லூரியின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கல்லூரியில் பயிலக்கூடிய ஏழை, எளிய மாணவர்களுக்கு அமீரக முன்னாள் மாணவர்கள் வழங்கி வரும் உதவித்தொகை அவர்களது வாழ்வின் உயர்வுக்கு முக்கியமானது. இதுபோல் இன்னும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வாழ்த்தினார்.
தேவகோட்டை அப்துல் ரசாக், லெப்பைக்குடிக்காடு நியமத்துல்லாஹ், திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், துறையூர் அப்துல் லத்தீப், திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் ஆகியோர் தங்களது கல்லூரிக் கால நினைவுகளையும், கல்லூரி தங்களது வாழ்வின் வளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் இருந்துள்ளது எனபதனையும் நினைவு கூர்ந்தனர்.
கடையநல்லூர் நகராட்சியில் வீட்டு வரியை குறைப்பதற்காக முக்கியப் பங்காற்றிய எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு கடையநல்லூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஹபிபுல்லாஹ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
ஜாபர் சித்திக் நன்றியுரை நிகழ்த்தினார். முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications