குலசேகரபட்டிணம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹரம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் 6 மணி முதல் இரவு 6.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.
விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து காணிக்கை வசூலித்து வந்தனர். நேற்று (6ம் தேதி காலை 10 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
பின்னர் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் காளி, ஓம்காளி என கோஷங்கள் எழுப்பினர்.
விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 5 டிஎஸ்பிக்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 120 சப்-இன்ஸ்பெக்டர் என ஆயிரத்திற்கும் மேலான போலீசார், ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
9 மாவட்டங்களிலிருந்து 3 பேர் கொண்ட தனிப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை வேடங்களை களைத்து காணிக்கைகளை கோயிலுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications