திருப்பூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்தவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி அணைப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் குணசேகரன் (39). இவர் திருப்பூர் மக்கள் முயற்சி என்ற அமைப்பை நடத்தி வருகின்றார்.
கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாயில் பள்ளிப்புத்தங்கள் எல்லாம் கூட தயாராக இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனையடுத்து சமச்சீர் கல்வி திட்டத்தை தற்காலிமாக நிறுத்தி வைத்தது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி குணசேகரன் நேற்று குமரன் சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதத்திற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி பெற்ற நிலையில், மாலை நேரத்தை தாண்டியும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனால் அவர் மீது திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications