விஷு திருவிழா: 10-ம் தேதி சபரி்மலை நடை திறப்பு
திருவனந்தபுரம்: சித்திரை விஷூ திருவிழாவையொட்டி வரும் 10-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகளுக்கு அடுத்தபடியாக சித்திரை விஷூ திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரை விஷூ கொண்டாடத்திற்காக சபரிமலை கோயில் நடை வரும் 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சகஸ்ரகலச பூஜை, 13, 18 ஆகிய தேதிகளில் களபாபிஷேகம் நடைபெறும். வரும் 15-ம் தேதி சித்திரை விஷூ கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் விஷூக்கனி தரிசனம் நடைபெறும். அதிகாலை முதல் பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பூஜை செய்யப்பட்ட நாணயங்களை கைநீட்டமாக அளிப்பார்கள்.
இதை பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தவிர சன்னிதானத்தில் தனி கவுன்டர்கள் மூலமும் நாணயங்கள் வினியோகிக்கப்படும். வரும் 18-ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். விஷூ விழாவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications