ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா
கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலையில் சந்தனக்கூடு விழா மிக விமர்ச்சியாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. செப்டம்பர் 28ம் தேதி மவ்லுது ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா துவங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு ஊர்வலம் நடந்தது. இதில் யானை மற்றும் குதிரைகளுடன் தைக்காவில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஏர்வாடி தர்காவை வந்தடைந்தது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு இப்ராஹிம் மஹாலில் சந்தனம் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. காலை 5 மணிக்கு நான்கு சக்கர் சப்பரத்தில் சந்தனக் கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக தர்கா வளாகத்தை வந்தடைந்தது.
தர்காவை 3 முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் சந்தனக்கூடு பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பல சமூக மக்கள் கலந்து கொண்டனர். பின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications