கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த சிற்பி கணபதி ஸ்தபதி மரணம்

84 வயதாகும் கணபதி ஸ்தபதி சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சென்னை பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு அவர் நேற்று மரணமடைந்தார்.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டியில் 1927ம் ஆண்டு பிறந்தவர் கணபதி ஸ்தபதி. இவரது குடும்பமே சிற்பிகள் நிறைந்த குடும்பம்தான். இவரது தந்தை ஸ்ரீவைத்தியநாத ஸ்தபதி பிரபல சிற்பி ஆவார். தந்தையைப் போலவை சிற்பத்தில் சிறந்து விளங்கினார் கணபதி.
இவரது திறமையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்துக் கெளரவித்துள்ளது.
இவரது திறமைகளுக்கு சான்றுகள் பல உள்ளன. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தவர் இவர்தான். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கட்டடமும் இவரது கைவண்ணம்தான். பல புகழ் பெற்ற இந்துக் கோவில்களை வெளிநாடுகளில் வடிவமைத்தவர் இவர்தான். உச்சமாக, கன்னியாகுமரியில் பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரும் கணபதி சிற்பிதான்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிலை உலகளவில் மிகப் பிரபலமான சிலைகளில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமாண்ட சிலையின் உயரம் 95 அடியாகும், பீடத்தின் உயரம் 38 அடியாகும். மொத்தம் 133 அடியாகும். 2004ம் ஆண்டு தென்னகத்தை சூறையாடிய கடுமையான சுனாமித் தாக்குதலின்போதும் கூட இந்த சிலைக்கு எந்த பாதிப்பும் வராமல் கம்பீரமாக நின்று அனைவரையும் வியக்க வைத்தது நினைவிருக்கலாம்.
கருணாநிதி இரங்கல்
கணபதி ஸ்தபதியின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் துணையாக இருந்து, அந்த பணிகளில் இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது இழப்பு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications