இன்று ம.பொ.சி. சிலை திறப்பு விழா : இந்திய நாடார் கூட்டமைப்பு, தமிழ்நாடு நாடார் பேரவை பெருமிதம்
சென்னை: சிலம்புச் செல்வர் மா.பொ.சி.யின் முழு திருவருவச் சிலையை சென்னை, தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் முதல்வர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைக்கிறார். அதற்காக கருணாநிதிக்கு இந்திய நாடார் கூட்டமைப்பு, தமிழ்நாடு நாடார் பேரவை ஆகியவை நன்றி தெரிவித்துள்ளன.
இது குறித்து இந்திய நாடார் கூட்டமைப்பின் தலைவர் நெல்லை நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் முழு திருவுருவச் சிலையை இன்று மாலை திறக்கவிருக்கும் தமிழக முதல்வருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருத்தணியை தமிழகத்துக்குப் பெற்றுத்தந்த போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர் மா.பொ.சி. மேலும், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே மூச்சாக இருந்தவர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு பெருமை சேர்ககும் வகையில் திருவுருவ சிலை அமைத்து, அதை தமிழாகவே வாழும் கலைஞர் திறந்து வைக்கப்போவதால் ஒட்டுமொத்த நாடார் சமூகமே குதூகலமாக உள்ளது. இந்த இனிய வேலையில் எங்கள் இதய மலர்களை கலைஞருக்கு காணிக்கை ஆக்குகிறோம்.
கலைஞர் சிலம்புச் செல்வருக்கு சரித்திரத்தில் இடம் மட்டும் பெற்றுத் தரவில்லை, அவரது குடும்பத்தாருக்கும் உதவ முன்வந்துள்ளார்.
தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் கடந்த 3-ந் தேதி நடந்தது. அப்போது தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் ரூ. 30 லட்சம் செலவில் செய்யப்பட்ட தங்க வீரவாள், தங்கக் கிரீடம் ஆகியவற்றை பரிசாக கலைஞருக்கு அளிக்கப்பட்டது.
கலைஞர் தனக்கு கொடுக்கப்பட்ட அந்த வாளையும், கிரீடத்தையும் இன்று மாலை நடக்கும் சிலை திறப்பு விழாவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை அதே மேடையில் வைத்து மா.பொ.சி. குடும்பத்தாருக்கு பகிர்ந்து கொடுக்கவிருக்கிறார். இதன் மூலம் அவர் வாழும் வள்ளல் என்பதையே உறுதிபடுத்தியுள்ளார்.
கலைஞரின் இந்த அளவற்ற அன்பை நாடார் சமூகம் ஒருபோதும் மறவாது என்றார்.
தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமுதாயமானாலும், பொதுவாழ்வானாலும், தமிழ் என்றாலும் தனது கொள்கையின்படியே வாழ்ந்த ம.பொ.சி. தமிழக மேலவையில் தடம் பதித்து பெருமை சேர்த்தவர். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய காவியங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அத்தகைய சிறந்த மனிதருக்கு முழு உருவச் சிலையை சென்னையில் நிறுவ வேண்டுமென்றும், மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் தமிழ்நாடு நாடார் பேரவை கோரிக்கை வைத்தது. மா.பொ.சி.க்கு சென்னை, தியாகராயநகரில் முழு திருவுருவச் சிலை அமைத்து எங்கள் கோரிக்கையை கலைஞர் நிறைவேற்றியுள்ளார். இதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இதற்காக தமிழ்நாடு நாடார் பேரவை, கிராமணி குல முன்னேற்ற சங்கம், திராவிட மக்கள் காங்கிரஸ் ஆகியவை தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றன. திருத்தணியை தமிழகத்திற்கு மீட்டுக் கொடுத்த சிலம்புச் செல்வருக்கு சென்னையில் சிலை அமைத்து பெருமை சேர்க்கிற முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த சிலை திறப்பு விழாவில் நாடார் சமுதாய பெரியவர்கள், உறவின் முறையை சேர்ந்தவர்கள், கிராமணி குல பெருமக்கள் மற்றும் திராவிட மக்கள் காங்கிரஸ், ஆன்றோர்கள், சான்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications