எம்ஜிஆர் ஆட்சிக் கால ஆறுதல்: ஜெயலலிதாவிற்கு சுவிஸ் தமிழ் சங்கம் வாழ்த்து!
கரூர்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு ஆறுதலையும் பாதுகாப்பையும் வழங்கியதோ அதே காலம் தங்கள் ஆட்சிக்காலத்தில் மலர வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சுவிஸ் தமிழ் சங்கம் வாழ்த்து தெரிவி்த்துள்ளது.
இது குறி்த்து சுவிஸ் தமிழ் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சிவ. அன்பழகன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது
தமிழக மக்களின் பேரண்மைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்ற தங்களுத்து எங்களது இனிய வாழ்த்துக்கள்.
தமிழக மக்களின் பெரும்பான்மை வெற்றியைப் பெற்ற பின்பு தாங்கள் கொடுத்த பேட்டியில் ஈழத் தமிழினத்துக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணை ஒன்றுக்கு ஓங்கிக் குரல் கொடுப்பேன் என்று கூறியது வேதனையில் வாடும் ஈழத் தமிழர்களின் உள்ளங்களை மட்டுமன்றி, அவர்களது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களின் இதயங்களையும் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் இதமாக வருடிக்கொடுத்துள்ளது.
தங்களது இந்த சொல் எங்களுக்கு ஆறுதலையும் வலுவான நம்பிக்கையையும் தர்மத்திற்கான நியாயமான எதிர்பார்ப்புக்களையும் அளித்துள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை உலகில் எந்த நாட்டிலும் வாழும் தமிழர்களுக்கும் ஏற்படக்கூடாது. இதனை ஒரு பாடமாக கொண்டு உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
எமது மக்களின் அரசியல் துயரங்களும் அவர்களின் அரசியல் ஆவலும் தங்களால் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களே. அதனாலேயே தங்களின் அரசியல் வெற்றியை ஈழத்தமிழர்களின் வெற்றியாக எமது மக்கள் உணர்ந்து நிற்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் மன்றமே பரிந்துரைத்துள்ள மேற்படி போர்க்குற்ற விசாரனையைத் துரிதப்படுத்தும் சர்வதேச தமிழர் முயற்சிக்குத் தங்களது அரசு அளிக்கும் ஆதரவானது, இந்திய உப கண்டத்தின் பிராந்தியப் பொறுப்பாகவும் மனித உரிமைகளுக்கான உலகத்தின் தார்மீக சர்வதேச ஒத்துழைப்பாகவும் அமையுமென்றும் சுவிஸ் தமிழ் சங்கம் நம்புகிறது.
உலகத் தமிழினமே நீதிக்காகக் குரல் எழுப்ப இயலாது தவித்த வேளையில், தங்களுக்கும் தங்களது கூட்டணிக்கும் தமிழ் இனப் பாதுகாப்பு, கடமை, பொறுப்பு ஆகியவற்றைப் புரிந்து கொண்டு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுவிஸ் தமிழ் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழின பாதுகாப்புக்காக உலக அளவில் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்
அரசியலில் நீதியை நிலை நாட்ட முயலும் தங்களது ஆட்சியில் தமிழக உறவுகள் மட்டுமன்றி, ஈழத் தமிழர்களும் பாதுகாப்பையும் ஜனநாயக சுதந்திரங்களையும் பெற்று, உலகின் ஏனைய தேசிய இனத்தவர் போல் கௌரவத்துடனும் அடிப்படை மனித உரிமைகளுடனும் வாழ்வார்கள் என்றும் சுவிஸ் தமிழ் சங்கம் முழுமையாக நம்புகிறது.
மூன்றாவது தடைவையாகவும் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவுள்ள தங்களுக்கு மீண்டும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குறிப்பாக மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலம் ஈழத் தமிழர்களுக்கு எவ்வாறு ஆறுதலையும் பாதுகாப்பையும் வழங்கியதோ அதே காலம் தங்கள் ஆட்சிக்காலத்தில் மலரும் என்று எமது மக்கள் நம்புகிறார்கள்.
தங்களுடைய இந்த ஆட்சிக்காலம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மீட்சிக்கும், தாய்த் தமிழகத்தின் நல்லாட்சிக்கும் பாரத மாதாவின் கீர்த்திக்கும் வலிமை சேர்க்கவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications