ஆதரவற்றவர்களை தேடி உணவு வழங்கும் திட்டம்- திருவாவடுதுறை ஆதின மடம் ஏற்பாடு

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஆதரவற்ற நிலையில் ஏராளமான மன நோயாளிகள், வயதானவர்கள் உள்ளனர். சரியான உணவு கிடைக்காததால் ஹோட்டல்களில் இருந்து வெளியே வீசப்படும் எச்சில் உணவுகளை உண்டு உயிர் வாழும் நிலை உள்ளது.
கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் செயல்பட்டு வரும் திருவாவடுதுறை ஆதினம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் 23-வது குருமாசன்னிதானத்தின் ஆலோசனைப்படி ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் பலருக்கு இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தினமும் காலையில் இட்லி அல்லது பொங்கல் பார்சல் செய்யப்பட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்படுகிறது. இது குறித்து மடத்தின் பொறுப்பாளர் ஆறுமுகம் கூறியதாவது,
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு காசி, ராமேஸ்வரம், திருச்சி, கன்னியாகுமரி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் 250-க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. இம்மடங்கள் மூலம் ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு திருப்பணிகளும் செய்து வருகிறோம். தற்போது கன்னியாகுமரியில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
விரைவில் தனி சமையல்காரர் நியமனம் செய்யப்பட்டு மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருவாவடுதுறையின் இத்திட்டம் மக்களிடம வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications