செவிகளை குளிர வைத்த பன்னிறு திருமுறைகள்
மதுரை: மதுரையில் 100 ஓதுவார்கள் பங்கேற்று பாடிய திருமுறைத் தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை பல்லாயிரக்கான இசை ரசிகர்கள் கேட்டு ரசித்தனர்.
தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம், தமிமிழிசைப் பாடல்களுக்குத் தரப்படுவதில்லை என்பது நீண்ட நாட்களாகவே ஒரு மனக்குறையாக உள்ளது. இதனைப் போக்கும் வகையிலும் தமிழிசைப் பாடல்கள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1999ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தமிழிசை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் அறுபத்து மூவரில் சைவ சமய குரவர்கள் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பெருமையைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விழா ஓதுவா மூர்த்தி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகள் சீர்காழியில் விழா நடத்தப்பட்ட பிறகு மதுரையில் 7-வது ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9-வது ஆண்டு விழா மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது. அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள நால்வர் சன்னதியில் இந்த விழா நடை பெற்றது.
63 நாயன்மார்களுக்கு சிறப்பு
பன்னிரு திருமுறை பாடல்கள் பாடிய நாயன்மார்களை வணங்கி தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடுவது இந்த விழாவின் சிறப்பம்சம். சனிக்கிழமை காலை விழா தொடக்கமாக திருக்கோயிலில் உள்ள 63 நாயன்மார் திருவுருவங்களுக்கும் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலையில் நால்வர் சன்னதியில் ஓதுவார்கள் தமிழிசை பாடத் தொடங்கினர். தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று கேட்பவர்களின் செவிகள் குளிர தேவரம், திருவாசம் பாடி மகிழ்வித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் நால்வர் சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் நாயன்மார் திருவுருவங்களுக்கு திருமஞ்சனம் பொருத்தி தமிழிசைப் பாடல்களால் அர்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்தர், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்தர், திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கினர்.
தங்கச் சப்பர வீதி உலா
மாலையில் நால்வர் திருவுருவங்கள் மற்றும் 12 திருமுறைப்பாடல்கள் அடங்கிய பெட்டகம் வைக்கபப்பட்ட தங்கச் சப்பர வீதி உலா நடைபெற்றது. விழாவில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரி கோ.ஜெயராமன் முன்னிலை வகித்தார். திருமுறை இசைப் பாடல் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.
பாடசாலை அமைக்கத் திட்டம்
பழைமை வாய்ந்த தமிழிசை தொடர்பான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதுமான அளவில் இல்லை. கர்நாடக இசைக்கு தரப்படும் முக்கியத்துவம் தமிழிசைக்கு தரப்படுவதில்லை. எனவே, தமிழிசை பாடசாலை அமைக்க ஓதுவா மூர்த்திகள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. தமிழிசைப் பாடல்கள் அனைத்தையும் இளைஞர்கள் அறிந்து கொள்ளும் விதமாக 5 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஓதுவார் கூட்டமைப்புச் செயலர் பொன் முத்துக்குமரன் தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications