ஆடித்தபசு: ஊசிமுனையில் தரிசனம் தரும் கோமதியம்மன்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா, கடந்த 24 ம் தேததி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில், தேரோட்டம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. தேரில் ஏறி மாடவீதிகளில் வலம் வந்த கோமதி அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சங்கரநாராயணர்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா பிரசித்தம். சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் சிவன் மற்றும் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வங்கள் என அடம் பிடித்தனர். இதுகுறித்து அம்பிகையிடம் முறையிட்டனர். சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில், அன்னை பார்வதிதேவி பூலோகத்திலுள்ள புன்னை வனத்துக்கு வந்தாள். சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தர வேண்டும் என வேண்டி ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று கடும் தவம் செய்தாள். அவளது இந்த திருக்கோலம் காண தேவர்களெல்லாம் பசுக்களின் வடிவில் வந்து தங்கினர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்மாள் எனப்பட்டாள்.
12 நாள் திருவிழா
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.
அடிப்பிரதட்சணம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றம் தொடங்கியது முதல் கோவில் மண்டபத்தில் பக்தர்கள் 108 சுற்று சுற்றுவார்கள். அடிப்பிரதட்சணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுவது சிறப்பம்சம்.












Click it and Unblock the Notifications