துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா மற்றும் மலர் வெளியீடு
துபாய்: துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவை 06.04.2012 அன்று மாலை துபாய் தேரா அல் காமிஸ் முஹம்மது உணவகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு எஸ். அபுசாலிஹ் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். துவக்கமாக மௌலவி எம். ஹபீப் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். ஹெச். சர்புதீன் முன்னிலை வகித்தார். எஸ். முஹம்மது யூனுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் புரவலர் செய்யது எம். அப்துல் காதர் குறித்த அறிமுகவுரையினை திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக் நிகழ்த்தினார். புஷ்ரா நல அறக்கட்டளையின் 15வது ஆண்டு சிறப்பு மலரை சிறப்பு விருந்தினர் செய்யது எம். அப்துல் காதர் வெளியிட முதல் பிரதியினை எஃப். உமர் ஃபாரூக் பெற்றுக் கொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை எஸ்.என்.எம். ஹுசைன் அப்துல் காதர், கம்பம் சையத் அப்தாஹிர், மணமேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
அப்துல் காதர் தனது உரையில் பல்வேறு சமூக, சமுதாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டியது குறித்து விவரித்தார். சீனா தான அறக்கட்டளை மேற்கொண்டு வரும் பணிகள் பற்றியும் கூறினார்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார். ஈமான் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் பொதுச்சேவை ஆற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இறைவேதத்திலிருந்து விவரித்தார். அமீரக வி.களத்தூர் சங்க தலைவர் ஜே. முஹம்மது அலி, ஹெச். சிபிலி, புஷ்ரா நல அறக்கட்டளையின் துபாய் மண்டல தலைவர் ஏ. ஷேக் தாவூது, நெடுங்குளம் நியாஸ், ராசல் கைமா முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஏ. ஷஃபியுல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார். ஏ. ஷேக் தாவுது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வி.களத்தூர் ஊரைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரவு உணவுக்குப் பின்னர் விழா இனிதே நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications