துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்பு!

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் தினமும் 3,500 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ பள்ளிவாசலில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி மாலை ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் இஃப்தார் ஏற்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். மேலும் அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியினை வழங்கி வருவது பெருமைப்படத்தக்கது என்றார். இப்பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அனைவருக்கும் தனது ரமலான் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தனது வாழ்த்துரையில் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் அ. முஹம்மது தாஹா உள்ளிட்டோரின் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் செயலாளர்கள் யஹ்யா, முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், ஹிதாயத்துல்லா, இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், கும்பகோணம் சாதிக், ஜமால், முஹைதீன் உள்ளிட்ட குழுவினரைப் பாராட்டினார்.
துணைத் தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான கீழக்கரை அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தனது வாழ்த்துரையில், தமிழகத்து நோன்புக் கஞ்சியினை சுவைமிக்க வகையில் தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை சீனியர் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான் தனது வாழ்த்துரையில், ஈமான் பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் அ. முஹம்மது தாஹா ஆகியோர் தலைமையிலான செயல் வீரர்கள் பம்பரமாகச் சுழன்று கோடை வெயிலையும் பொருட்படுத்தாது சிறப்பான வகையில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவுகளை வழங்கி வரும் பணி பாராட்டத்தக்கது என்றார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி:
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 06.08.2012 அன்று மாலை துபாய் நாசர் சதுக்கம் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
துவக்கமாக ஜமால் இறைவசனங்களை ஓதினார். அஞ்சுகோட்டை அப்துல் ரஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். ரஹ்மத்துல்லா, திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், ஹபீப், ஜமால், பள்ளபட்டி காசிம் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது தாய் வீட்டிற்குள் நுழைந்த மகிழ்ச்சியில் கல்லூரிக் கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஜாபர் சித்திக் ஆண்டறிக்கை வாசித்தார். அவர் தனது உரையில் கல்லூரியின் பழைய மாணவர்கள் வசதியற்ற மாணவர்களது படிப்பிற்கு உதவி வருவதனை குறிப்பிட்டு ஒவ்வொரு மாணவரும் ஒரு மாணவரையாவது படிக்க வைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தனது உரையில், வாழ்வின் முதல் பருவம் கல்லூரி வரையிலானது எனவும் அவ்வகையில் ஜமால் முஹம்மது கல்லூரி படிப்பறிவு தவிர இறையச்சம் உடையவனாய், நல்லதொரு மனிதனாய், பண்புள்ளவனாய், ஏனையோருடன் பழகும் தன்மையுடையவனாய் ஆக்கியுள்ளது. இரண்டாம் பருவத்தில் தனக்கு வழிகாட்டியாக, உற்றதோர் தோழனாக, விளங்கும் இனிய நண்பர் திரு.ஏ.ஆர்.சந்திரசேகர் அவர்களைக் குறிப்பிட்டு நட்புக்கு மகுடம் சூட்டினார்.
நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய பங்களிப்பு பற்றி இனமக்கள் அறியும்பொருட்டு உரை வேண்டும் என்கிற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஒன்றிரண்டு சம்பவங்களை, சரித்திரங்களை எடுத்துரைத்தார்.
ஹஜ் பயணத்திற்காக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் போது ஏற்படுகின்ற கால தாமதம் பற்றி உரியதொரு கவனஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி அதற்குரிய அமைச்சகத்தை அணுகி.. உரிய ஆலோசனைக் கூட்டங்கள்.. கலந்தாய்வுகள் நடத்தி ஒரு வார காலத்தில் தருவதாக அமைச்சக அதிகாரிகள் உறுதியளித்தார்கள் என்று குறிப்பிட்ட போது சபை ஆரவாரம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இருங்கள்.. இருங்கள்.. அதற்குள் என்ன அவசரம்.. என்று தன் பேச்சைத் தொடர்ந்தார் அப்துல் ரஹ்மான். ஒரு வார காலம் என்பதை அடுத்து தனது வேண்டுகோளை ஒரே நாளில் தர வேண்டும் என்று வலியுறுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் ஒப்புதலோடு அது ஒரு நாளில் தரப்படும் என்கிற வெற்றியை ஈட்டியதை பெருமிதத்தோடு குறிப்பிட்டதோடு இதுவரை இவ்வகையில் பயன்பெற்றோர் புள்ளிவிவரமும் தெரிவி்த்தார்.
அடுத்து, கட்டாய திருமணச் சட்டம் பற்றியும் அதனால் நம் இனத்தவர்க்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் உரிய வகையில் எடுத்துரைத்தார். 10 ரூபாய் முத்திரைத்தாளில் அபிடவிட் மூலம் மணமகன், மணமகள் புகைப்படங்களை ஒட்டி, ஒருவரை ஒருவர் திருமணம் செய்ததை உறுதி செய்து, தக்க சாட்சிகளோடு நோட்டரி பப்ளிக் கையொப்பத்துடன் விண்ணப்பித்தால் அதன் அடிப்படையில் அவருக்கு திருமணச் சான்றிதழ் தரப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்கள் தெரிவித்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு முறைப்படி ஒருசில நாட்களில் வெளியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஈடிஏ பிபிடி சீனியர் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அன்வர் பாஷா அழகு தமிழில் இனிய உரை நிகழ்த்தினார்.ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி ஈமான் அமைப்பின் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. முனைவர் பட்டம் பெற்ற தாளாளர் காஜா நஜிமுதீனுக்கு ஈமான் அமைப்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
சூப்பர் சோனிக் மேலாண்மை இயக்குநர் ஜியாவுதீன் தனக்கு பேசும் திறன் அதிகமில்லை என்று கூறி பேச்சைத் தொடர்ந்த அவர்.. பேசிய பேச்சில் உள்ள கருத்து முத்துக்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. நம் இனத்தில் உள்ளவர்களை தாம் கேட்டுக்கொள்வதெல்லாம் 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் முனைந்து தொழில் தொடங்கி வெற்றி பெற வேண்டும். அவ்வாறு முயலும் அனைவருக்கும் தம்மால் முடிந்த உதவிகள் செய்யக் காத்திருக்கிறேன் என்றார்.
ஜமால் நன்றியுரை நிகழ்த்தினார். முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications