நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடரும் பெண்களின் போராட்டம் ...

Subscribe to Oneindia Tamil

Womens Day
சர்வதேச மகளிர் தினம் இன்றைக்கு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் என்பவன் சக்தியின் அம்சம். தாயகவோ, மனைவியாகவோ அல்லது சகோதரியாகவோ அல்லது மகளாகவோ இருந்து ஆண்களுக்கு சக்தியை அளித்து அவர்களின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கின்றாள்.

இல்லற வாழ்க்கையில் ஆணைவிட பெண்ணுக்கு சற்று அதிகமான பொறுப்புகள் உண்டு. குழந்தை வளர்ப்பில் தொடங்கி, குடும்ப வாழ்க்கை தடுமாறாமல் ஓட தன் சக்தி முழுவதையுமே செல்வழிக்கிறாள் பெண். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இன்னமும் சரிநிகராய், சமத்துவமாய் செயல்பட இயலாமல் உள்ளனர். அதற்கு காரணம் ஆண்களுக்கு இடையே உருவான அச்சம். பெண் என்பவள் தலைமைப் பொறுப்பிற்கு தகுதியானவள் என்பதை அறிந்தும் அவளை அடக்கி வைத்துள்ளது ஆணாதிக்க சமுதாயம்.

தலை வணங்கிய ஆண்கள்

ஆதியில் பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். அவளே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்று கானக மனிதர்கள் உணர்ந்திருந்தனர். தனக்கு தேவையான துணையை போட்டி வைத்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு இருந்தது. ஆனால் நாகரீக மாற்றம் ஆணை அச்சமடைய செய்தது. பெண்ணை கீழே இறக்கிவிட்டு தலைமைப் பொறுப்பை தட்டிப் பறித்தது ஆணாதிக்க சமுதாயம்.

அடிமைப்படுத்திய சமுதாயம்

தலைமைப் பதவி இல்லாவிட்டால் என்ன? பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் சாதனையை படைத்தனர். அறிவியல்துறையில் தொடங்கி விவசாயத்துறை வரையிலும் பெண்களின் சாதனை உலகத்தினரை வியக்க வைத்தது.ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

உரிமைக்கு குரல்

ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, பெண்கள் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.

சர்வதேச மகளிர் தினம்

1908ம் ஆண்டு அமெரிக்க நாட்டில் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது. அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

உரிமைக்காக தொடர் போராட்டம்

பெண்கள் தினம் கொண்டாடப் பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. 1911 ஆம் தொடங்கி 2012 ம் ஆண்டு வரை பெண்களின் உரிமைப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கிறது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடினாலும் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது இந்த புள்ளி விபரங்கள்.

சமுதாயத்தில் ஆண்களுக்கு இணையான கருத்து / பொருளாதார / கல்விச் சுதந்திரம் இன்று வரையிலும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று பெண்கள் பல துறைகளில் நுழைந்துள்ள போதும் அவர்களின் திறமைக்கேற்ற வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புகளைப் பெற்றாலும் அவற்றை இழித்துப் பேசுவதற்கான வாய்கள் எப்போதும் மூடுவதேயில்லை. அரசியல் துறையில் ஆணுக்கு சரிநிகராய் இட ஒதுக்கீடு கேட்கவில்லை. 33 சதவிகிதம் கேட்டும் கூட அதற்காக வழி இன்னமும் திறக்கப்படவேயில்லை என்பதுதான் வேதனை.

என்றைக்கு அனைத்து மகளிரும் மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதையோடு, சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று சம உரிமை பெறுகின்றனரோ அன்றைக்குத்தான் உண்மையான மகளிர் தினத்தின் கொண்டாடப்படுவதன் அர்த்தம் விளங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+