ஆடல், பாடல், உறியடி... டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸில் பொங்கல் கொண்டாட்டம்!

டல்லாஸ் வட்டார தமிழர்களை ஒன்றிணைக்கும் 'மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம்' முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு தமிழர் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம், பங்கேற்கும் அனைவருக்கும் தமிழ்நாட்டில் ஒரு திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்துகிறார்கள். சமீபத்தில், அமெரிக்காவிலேயே புதுமையாக, திறந்தவெளியில் தமிழ்நாட்டு வழக்கப்படி சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்து செய்தார்கள்.
பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக சனிக்கிழமை ஜனவரி 21 ம் தேதி போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் நடக்கும் திருவிழாவைப்போல் நடத்தியுள்ளனர்.
மாலை சுமார் நான்கு மணி அளவில் தமிழர் குடும்ப சிறுவர் சிறுமிகள் அழகு தமிழில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். அடுத்து வந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் இரவு எட்டு மணி வரையிலும் பார்வையாளர்களை கட்டிப்போட்டு விட்டது.
உறியடி...
ஆடவர்களுக்கான போட்டிகளில் உறியடித்தல் நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அமெரிக்காவில் உறியடி நிகழ்ச்சியைப் பார்த்ததில் பல தமிழர்கள் பரவசப்பட்டனர்.
மேலும் பல ஆண்கள், பெணகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசளித்து ஊக்கப்படுத்தியது வித்தியாசமான அணுகுமுறை.
பரதநாட்டியம், கூத்து, திரைப்பாடல்கள், திரையிசை நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புறப்பாட்டு என டல்லாஸ் வாழ் தமிழர்களின் பல்துறை திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைந்தது. தேமதுர தமிழை கேட்டு பருகும் அருமையான வாய்ப்பாக திருவாசகம் பற்றிய உரை அமைந்திருந்தது.
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் பத்மினி, வைஜயந்திமாலா நடனமாடிய ‘கண்ணும் கண்ணும் கலந்து’ போட்டி நடனப்பாடலை முழுமையாக, பிரதிபா மற்றும் லாவண்யா ஆகிய இருவரும் வெகு சிறப்பாக ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள். புகழ் பெற்ற பி.எஸ்.வீரப்பாவின் ‘சபாஷ் சரியான போட்டி’ வசனத்திற்கு பொருள் சேர்க்கும் வகையில் புதிய பத்மினி-வைஜெயந்திமாலா போட்டியோ என்று வியக்கும் வகையில் தோழிகள் இருவரும் கடுமையான போட்டியுடன் நடனமாடினார்கள்.
நிகழ்ச்சியின் கடைசியாக இடம்பெற்ற நடனக்கலைஞர் கல்பனா குழுவினரின் ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் நாட்டுப்புறப்பாட்டு, ஷங்கர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலைப்போல், பார்வையாளர்களை துள்ளிக்குதிக்கச் செய்தது. கரகாட்டகாரனின் முந்தி முந்தி விநாயகரே மற்றும் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணனின் பாடல்களுக்கு விசில் சத்தத்திலும், கைத்தட்டல்களிலும் அரங்கமே அதிர்ந்தது.
கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்து படைத்த பிறகு, அறுசுவை விருந்தாக வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
நண்பன் படம் திரையிடல்
முன்னதாக தமிழ்சங்கத்தின் சார்பில் உறுப்பினர் குடும்பங்களுக்காக, பொங்கல் திரைப்படமாக, ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வெளிவந்துள்ள நண்பன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி20) இரவு சிறப்புக்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் கலைச்செல்வி, கஸ்தூரி, கீதா, செல்வா, சுப்ரமணியன், சுமதி, ரகு, புவனேஸ்வரி மற்றும் விஜி ராஜன் ஆகியோர் மேலும் பல தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து செய்திருந்தார்கள்.
படங்கள் – சண்முகசுந்தரம்












Click it and Unblock the Notifications